கருணாநிதி போல் பேசமாட்டேன்- இளங்கோவன்
தூத்துக்குடி: முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் என்னைப் பற்றி கருணாநிதி கூறிய கருத்திற்கு, நானும் அவர் போன்று தரம் தாழ்ந்து பதில் கூற விரும்பவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
வாகைகுளம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
நெல்லை, ராதாபுரம் பஸ் ஸ்டாண்டில் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள சிலைகளுடன் கக்கன்,காமராஜர் சிலைகளையும் நிறுவி, காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக முதல்வர் கருணாநிதி வயது, அனுபவத்தில் மூத்தவர். எனவே, முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், 'சிலரின் உளறல்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது' என என்னைப் பற்றி அவர் கூறிய கருத்திற்கு, நானும் அவர் போன்று தரம் தாழ்ந்து பதில் கூற விரும்பவில்லை.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்திய போது அதற்கு திமுக தரப்பில் டி.ஆர். பாலு நாடாளுமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்தார். அதுபோல தமிழகத்தில் சில பிரச்சனைகளுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றோம்.
கருத்து வேறுபாடுகள் காரணமாக, எதிர்காலத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடருமா? என்று இப்போதே கூற நான் ஒன்றும் ஜோசியக்காரன் அல்ல. ஆனால், தற்போது தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் உறவு நன்றாக உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications