புதிய காற்றழுத்த தாழ்வுநிலை-தமிழகத்தில் மீண்டும் கன மழை

சென்னையில் இன்று காலை முதல் விட்டு விட்டு கன மழை கொட்டிக் கொண்டிருக்கிறது.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதால் மழை வலுத்து வருகிறது.
மன்னார் வளைகுடாவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக உருவாகி, தமிழகத்தி்ல் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வந்தது.
இந் நிலையில் அது பின்னர் அரபிக் கடலுக்கு இடம் பெயர்ந்து ஃபியான் புயலாக மாறி, மகாராஷ்டிராவில் பெரும் மழையை ஏற்படுத்தியது. தமிழகத்திலும் நீலகிரி மாவட்டத்தில் பெரும் சேதாரத்தை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில் புயல் திசை மாறியதால் தமிழ்நாட்டில் மழை நின்றது.
இந் நிலையில் குமரிக் கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. ஃபியான் புயலின் முதல் கட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவான அதே பகுதியில்தான் இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையும் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக மன்னார் வளைகுடாவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானால் தமிழகத்தில் கன மழை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய காற்றழுத்த்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் காலை முதல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக இன்று பிற்பகல் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் வெளியிட்டுள்ள அறிக்கை..
தமிழகத்திலும், கேரளாவிலும் சில இடங்களில் இன்று மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக மணிமுத்தாறு, குண்டா பிரிட்ஜில் தலா 4 செமீ மழை பெய்துள்ளது.
தக்கலை, கேத்தியில் தலா 3 செமீ, புதுச்சேரி, காரைக்கால், வானூர், முத்துப்பேட்டை, நாங்குனேரி, பூதப்பாண்டி, பெரியநாயக்கன்பாளையம், குன்னூர், தோகைமலை, ஆண்டிப்பட்டி, போடிநாயக்கனூர் தலா 2 செமீ மழை பெய்துள்ளது.
கடலூர், செய்யூர், சேத்தியாதோப்பு, அதிராம்பட்டினம், கல்லணை, கும்பகோணம், பேராவூரணி, திருவிடைமருதூர், திருக்காட்டுப்பள்ளி, குடவாசல், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டனம், மயிலாடுதுறை, முதுகுளத்தூர், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், ராமேஸ்வரம், ராநாதபுரம், தொண்டி, அம்பாசமுத்திரம், செங்கோட்டை, சிவகிரி,
கன்னியாகுமரி, நாகர்கோவில், ஓசூர், திருச்செங்கோடு, அவினாசி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், மாயனூர், புல்லம்பாடி, லால்குடி, உசிலம்பட்டி, கூடலூர், உத்தமபாளையம், தேனி, இளையாங்குடி, சிவகாசி, நத்தம் ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பெய்துள்ளது.
16ம் தேதி வரையிலான காலக்கட்டத்துக்கான வானிலை முன்னறிவிப்பு..
கடலோரத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
உட்புறத் தமிழகத்தின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் சில இடங்களில் கன மழை அல்லது இடியுடன் கூடிய கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
சென்னை நகரைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் பொதுவாக வானம் மேக மூட்டமாக இருக்கும். சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை அல்லது கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications