சிலை: மாயா கோரிக்கை-சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு
டெல்லி: லக்னோவில் அமைத்துள்ள ரூ. 2600 கோடி அம்பேத்கர் நினைவிடத்தைப் பராமரிக்கும் பணியை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற உ.பி. அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.
உ.பி. மாநிலத்தில் சர்ச்சைக்குரிய சிலைகள் திறப்பு, நினைவிடங்கள், பூங்காக்கள் திறப்பு ஆகியவற்றை மேற்கொள்ளக் கூடாது, கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கையுடன் கூடிய தடையை விதித்துள்ளது.
இந்த நிலையில் லக்னோவில் உள்ள அம்பேத்கர் நினைவிடப் பூங்காவை பராமரிக்க அனுமதி கோரி உ.பி. அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.பேடி, ஜே.எம். பன்சால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பராமரிப்பு பணிகள் தொடர்பாக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. அதுகுறித்து இந்த கோர்ட்டில் நீண்ட விவாதமும் நடைபெற்றது. பிறகு ஏன் எங்களது உத்தரவை மாற்ற வேண்டும் என்று கோருகிறீர்கள். நவம்பர் 30ம் தேதி வரை நாம் காத்திருக்க முடியும். அதற்குள் எந்த சூழ்நிலையிலும் மாற்றம் ஏற்படுத்தத் தேவையில்லை. மாற்றமும் கிடையாது என்று கூறி நிராகரித்து விட்டனர்.
மேலும், இந்த மனுவை நவம்பர் 30ம் தேதி விசாரணைக்கு வரும் முக்கிய மனுவுடன் சேர்த்து விசாரிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.