காதலியை கர்ப்பமாக்கி ஏமாற்றிய காதலுக்கு சிறை
திண்டுக்கல்: திருமண ஆசை காட்டி காதலியை ஏமாற்றியவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (30). இதே பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (21) .
இவர்கள் இரண்டு பேரும் கடந்த சில வருடங்களாக மனம் உருகி காதலித்து வந்துள்ளனர். உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன் என்று கணேசன் செல்விக்கு ஆசை வார்த்தை கூறி உறவு வைத்துள்ளார்.
அதன் பின்னர் தன்னை திருமணம் செய்ய செல்வி கணேசனை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு கணேசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செல்வி இது குறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கணேசனை கைது செய்து நிலக்கோட்டை நீதி மன்றத்தில் ஆஜர் செய்தனர்.
இந்த வழக்கில் மாஜிஸ்திரேட் கருணாநிதி, செல்வியை காதலித்து ஏமாற்றிய கணேசனுக்கு 6 மாதம் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து, மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் கணேசன் மனு தாக்கல் செய்தார். மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி ராஜூ, நிலக்கோட்டை கோர்ட் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டார்.