நீலகிரி நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 6000 வழங்கக் கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: நீலகிரி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 6000 நிவாரண உதவியும், பிற நிவாரண தொகுப்புகளையும் வழங்கக் கோரி அதிமுக சார்பில் நாளை நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:
அண்மையில் ஏற்பட்ட கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, நூற்றுக்கணக்கான சிறு பாலங்கள் உடைந்துள்ளதோடு மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. குக்கிராமங்களில் சாலைகள் முற்றிலும் பழுதடைந்துள்ளன.
ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட தோட்டப் பயிர்கள் மற்றும் சாகுபடி பயிர்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. வீடுகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் உணவுக்கும், மாற்று உடைக்கும் வழியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து நீலகிரி மாவட்டம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு வகைகள், பால், பெட்ரோல், டீசல் போன்றவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல இடங்களில் உணவுப் பொட்டலங்கள் கூட தரப்படுவதில்லை என்றும், நிவாரண முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்றும், நிவாரண உதவித் தொகுப்பு இன்னமும் வழங்கப்படவில்லை என்றும், ஒரு சில இடங்களில் பணமுடிப்பு மட்டுமே வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பன்மடங்கு உயர்ந்துள்ள சூழ்நிலையையும், நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத இழப்பையும் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் அரிசி, மண்ணெண்ணை, சமையலுக்கு தேவையான மளிகைப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், துணிமணிகள், 6 ஆயிரம் ரூபாய் நிதிஉதவி ஆகியவற்றை வழங்குவதுதான் பொருத்தமாக இருக்கும்.
ஆனால், தற்போது நீலகிரி மாவட்டம் மற்ற மாவட்டங்களிலிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில், ஏழை, எளிய மக்கள் தங்களது வீடுகளையும், வீடுகளில் இருந்த பொருட்களையும் இழந்து நிற்கின்ற சூழ்நிலையில், ஒரு சில இடங்களில் 2,000 ரூபாய் மட்டுமே வழங்குவது மக்களை ஏமாற்றும் செயலாகும்.
எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அரிசி, மண்ணெண்ணை, மளிகை பொருட்கள், சமையல் பாத்திரங்கள், துணிமணிகள், நிவாரண உதவித்தொகையாக 6,000 ரூபாய் முதலானவற்றை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், வீடு இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தர வலியுறுத்தியும், நீலகிரி மாவட்டத்தில் பழுதடைந்த சாலைகளை உடனடியாக செப்பனிட வலியுறுத்தியும், கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 5 லட்சம் ரூபாய் வழங்க வலியுறுத்தியும், அ.தி.மு.க. நீலகிரி மாவட்ட கழகத்தின் சார்பில், திங்கட்கிழமை காலை 11 மணிக்கு, நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமையிலும், நீலகிரி மாவட்ட செயலாளர் எம்.செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெறும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications