அருணாச்சல் பிரதேச மாநில பயணத்தை முடித்தார் தலாய் லாமா
இடாநகர்: அருணாச்சல் பிரதேச பயணத்தை திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா இன்றுடன் நிறைவு செய்தார்.
கடந்த ஒரு வார காலமாக அருணாச்சல் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் தலாய் லாமா. இதற்கு சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
1962ம் ஆண்டு இந்தியா மீது படையெடுத்ததையெல்லாம் மேற்கோள் காட்டி மிரட்டியது. இதற்கு இந்தியா கடுமையான பதிலடி பதிலைக் கொடுத்தது.
இந்த நிலையில் தலாய் லாமாவின் அருணாச்சல் பிரதேச பயணம் இன்று காலையுடன் முடிவடைந்தது. அவர் இன்று காலை தனது பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி கிளம்பிச் சென்றார்.
நேற்று தவாங் நகரிலிருந்து இடா நகருக்கு தலாய் லாமா வந்து சேர்ந்தார். பின்னர் இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் அவர் குவஹாத்தி புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து அவர் டெல்லி கிளம்பினார்.
நேற்று தனது பயணத்தின் கடைசி கட்டமாக முதல்வர் டோர்ஜி கந்துவின் புதிய அதிகாரப்பூர்வ இல்லத்தை திறந்து வைத்தார் தலாய் லாமா. அந்த வீட்டில்தான் நேற்று இரவு அவர் தங்கினார்.
மத்திய அரசு வழங்கிய ரூ. 5 கோடி நிதியில் இந்த புதிய பங்களா கட்டப்பட்டுள்ளது. இந்தப் புதிய வீட்டுக்கு டோர்ஜி குடியேறவுள்ளார்.