மணிமுத்தாறு அணை நாளை திறப்பு
நெல்லை: நெல்லை மாவட்டத்தில மீண்டும் பலத்த மழை தொடங்கியிருப்பதால், அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மணிமுத்தாறு அணை நாளை திறக்கப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. காற்றழுதத தாழ்வு மண்டலத்தின் காரணமாகவும் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் காலை முதல் மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
பாபநாசம் அணையில் நேற்று 118 அடி நீர் மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1563 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மணிமுத்தாறு அணையில் 96.60 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 625 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 35 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறில் 136.66 அடி நீர்மட்டம் உள்ளது.
மணிமுத்தாறு அணை நாளை திறப்பு
பாசன சாகுபடிக்காக மணிமுத்தாறு அணை நாளை திறக்கப்படுகிறது.
மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 80 அடியை தாண்டிய போது பிரதான கால்வாய் பாசனத்திற்காக அணை திறக்கப்படுவது வழக்கம். பிரதான கால்வாய் நீரொழுக்கு விதிமுறைகளின்படி இக்கால்வாய்களில் நான்கு ரீச்சுகளுக்கும், ஆண்டுதோறும் சுழற்சி முறையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதன்படி நடப்பாண்டில் நாங்குநேரி, சாத்தான்குளம், திருசசெந்தூர், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, பகுதிகளை சேர்ந்த விளைநிலங்கள் பயனடையும் வகையில் 3வது மற்றும் 4வது ரீச் குளங்களுக்கு முன்னுரிமை அளித்து நாளை தண்ணீர் திறந்து விடப்படுவுள்ளதாக பொதுப்பணிதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றைய நிலவரப்படி அணையில் 96.60 அடி தண்ணீர் பெருகியுள்ளது.