மின் உற்பத்தியில் பின்னடைவு ஏன்- வீராசாமி விளக்கம்
புதுடெல்லி: தமிழகத்தில் கூடுதல் மின் உற்பத்தி திட்ட இலக்கை அடைய போதிய உபகரணங்களும், திறமையான பணியாளர்களும் இல்லை என்று டெல்லி மாநாட்டில் தமிழக மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.
மாநில மின்சாரத்துறை அமைச்சர்களின் மாநாடு டெல்லியில் நடந்தது. இதில் தமிழகம் சார்பில் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கலந்துகொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நடப்பு 11வது ஐந்தாண்டு (2007-12) திட்டத்தில் தமிழ்நாட்டில் 5055 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது. அதில் 147 மெகாவாட் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 4098 மெகாவாட்டுக்கான திட்டங்களை நிறைவேற்ற போதிய கருவிகள் இல்லை. திறன் படைத்த நபர்கள் இல்லை. இதனால் தாமதம் ஏற்படுகிறது. தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யவேண்டும்.
2000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட கூடங்குளம் அணுமின் நிலையம், 500 மெகாவாட் கொண்ட நெய்வேலி அனல் மின் நிலைய விரிவாக்க திட்டம் ஆகியவை அடுத்த மாதம் ஜூனுக்குள் உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றின் உற்பத்தியை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 12வது ஐந்தாண்டு திட்டத்தில் 3400 மெகாவாட் திறன் கொண்ட 3 அனல் மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவற்றுக்கு நீண்ட காலம் நிலக்கரி வழங்க இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதை விரைந்து முடிக்க வேண்டும்.
மின் உற்பத்திக்கு பயன்படுத்தும் திரவ எரி பொருளுக்கு கலால் வரியை ரத்து செய்ய வேண்டும். இதன் மூலம் யூனிட்டுக்கு 50ல் இருந்து 60 காசு உற்பத்தி செலவு குறையும். தமிழ்நாட்டு அனல் மின் நிலையங்களுக்கு 1 கோடியே 40 லட்சம் டன் நிலக்கரி ஒதுக்கப்படுகிறது. இவை கப்பல் வழியாக கொண்டு வரப்படுகிறது. இதற்கு அதிக அளவில் சேவை வரி விதிக்கப்படுகிறது. இதை நீக்க வேண்டும் என்றார்.