கன மழையால் கொடைக்கானலில் நிலச்சரிவு
கொடைக்கானல்: மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கன மழை பெய்ததால் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து லேசான பாதிப்பை சந்தித்தது.
பலத்த மழை காரணமாக கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச்சாலையில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், வாகனங்கள் குறைந்த வேகத்தில் சென்று வருகின்றனர்.
மலைச்சாலையில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டு வருவதோடு, சாலைகள் மழை நீரால் அரித்து செல்லப்பட்டுள்ளன. நிலச்சரிவு நிகழ்ந்த பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2 நாட்களாக ஓரளவு மழை நின்று இருந்ததால் சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கி இருந்தனர். திடீரென மழை தீவிரம் அடைந்ததால் வெளியே சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் விடுதிகளிலேயே முடங்கி உள்ளனர்.