போதனை: மாணவிகளின் தந்தையை கொன்ற ஆசிரியர்கள்
ஹைதராபாத்: சரியாக பாடம் நடத்தவில்லை என்று கூறிக் கண்டித்த மாணவிகளின் தந்தையை பள்ளி ஆசிரியர்கள் சேர்ந்து கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் மெகபூப்நகர் மாவட்டம் உப்பாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் குரு பாஷா (50). இவருக்கு இரு மகள்கள். இருவரும், அரசுப் பள்ளியில், முறையே 4 மற்றும் 5ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இருவருக்கும் பாடம் ஏறவில்லை. இதனால் ஆசிரியர்கள் மீது அதிருப்தி அடைந்தார் பாஷா. பள்ளிக்குச் சென்ற அவர், ஒழுங்காக பாடம் சொல்லிக்கொடுங்கள் என்று ஆசிரியர்களை கண்டித்து திட்டினார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாஷா திடீரென மரணமடைந்தார். இதையடுத்து அவரது மனைவி, போலீஸாரிடம், ஒரு புகார் கொடுத்தார்.
அதில், சரியாக பாடம் கற்றுக் கொடுங்கள் என்று கூறிய எனது கணவரை, பள்ளி ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். பின்னர் இரவு முழுவதும் பஞ்சாயத்து அலுவலகத்தில் அடைத்து வைத்தனர்.
இதில் அவர் உடல் நலம் குன்றி சுய நினைவு இழந்தார். உடனே அவரை மெகபூப் நகர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் கூறுகையில், குடிபோதையில் சென்று ஆசிரியர்களிடம் தகராறு செய்து இருக்கிறார். தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் சேர்ந்து அவரை பள்ளிக்கு வெளியே அனுப்பி வைத்தனர்.
பாஷா உடலில் உட்காயங்களோ, வெளிக்காயங்களோ இல்லை. அவர் போதைக்கு அடிமையானவர். இதனால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதில் அவர் இறந்து இருக்கலாம் என்று கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications