ஜெ. எஸ்டேட்-வேலியை அகற்றிய பொதுமக்கள்
கோத்தகிரி: கோத்தகிரியில் அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் சர்ச்சைக்குரிய வேலியை பொதுமக்கள் சிலர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொடநாடு எஸ்டேட்டை ஒட்டி, அண்ணாநகர் மற்றும் காமராஜர்நகர் போன்ற குக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் தங்களின் கிராமங்களுக்குச் சென்றுவர எஸ்டேட் வழியை கடந்த காலத்தில் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால், பின்னர் எஸ்டேட்டில் வேலி அமைத்துவிட்டதால், அந்த வழியை கிராமமக்கள் பயன்படுத்த முடியவில்லை.
சுடுகாட்டுப் பாதை, கோவில் பாதை, குடிநீர் பம்ப் அறை ஆகியவற்றை ஆக்கிரமித்து அப்பகுதியில் வேலி போடப்பட்டதாகக் கூறி, கொடநாடு ஊராட்சித் தலைவர் உட்பட பொதுமக்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து, கொடநாடு ஊராட்சித் தலைவர் பொன்தோஸ், கோத்தகிரி தாசில்தாரிடம் புகார் தெரிவித்திருந்தார்.
வருவாய்த் துறை சார்பில், நில அளவை செய்யப்பட்டதில், எஸ்டேட் நிர்வாகம் ஆக்கிரமித்து வேலி அமைக்கவில்லை என தெரிய வந்தது. இதற்கு ஒப்புக்கொள்ளாத ஊராட்சித் தலைவர், பழைய நில அளவை ஆவணப்படி, மாவட்ட கலெக்டர் மற்றும் ஆர்.டி.ஓ முன்னிலையில், நில அளவை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு, கொடநாடு எஸ்டேட் நிர்வாகம் பொது வழியை மறித்து வேலி அமைத்துள்ளது தொடர்பாக, நீலகிரி மாவட்ட நிர்வாகம், 15 நாட்களில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என மத்திய அமைச்சர் ராசா கூறியிருந்தார்.
இந்நிலையில், எஸ்டேட் நிர்வாகம் அமைத்த வேலியை, திடீரென நேற்று ஊர் மக்கள் சிலர் அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக எஸ்டேட் நிர்வாகம் சார்பில், சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.