சுப்ரீம் கோர்ட்-பி.டி.தினகரன் தவிர்த்து 4 நீதிபதிகள் பதவியேற்பு
டெல்லி: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் தவிர்த்த 4 நீதிபதிகள், உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
ஐந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக உச்சநீதிமன்ற காலேஜியம் பரிந்துரை செய்தது. ஆனால் அவர்களில் ஒருவரான பி.டி.தினகரன் பெருமளவில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாகவும், முறைகேடாக சொத்துக்களைக் குவித்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அறிக்கை கோரியிருந்தது உச்சநீதிமன்றம். இதையடுத்து 2 அறிக்கைளை அனுப்பி வைத்தார் ஆட்சித் தலைவர். அதில் புறம்போக்கு நிலத்தை மடக்கி வேலி போட்டிருப்பது உண்மை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து தினகரனின் பெயர் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு மற்ற நான்கு நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக அறிவிக்கப்பட்டனர்.
அதன்படி, மத்திய பிரதேச உயர்நீதி்மன்ற தலைமை நீதிபதி பட்நாயக், பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதி்மன்ற தலைமை நீதிபதி திராத்சிங் தாக்கூர், குஜராத் உயர்நீதி்மன்ற தலைமை நீதிபதி ராதாகிருஷ்ணன், கொல்கத்தா உயர்நீதி்மன்ற தலைமை நீதிபதி சுரேந்தர் சிங் ஆகியோர் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.
இவர்களையும் சேர்த்து தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 31 ஆகும். எனவே ஐந்து காலியிடங்கள் உள்ளன.












Click it and Unblock the Notifications