ஹெட்லியுடன் தொடர்பு-ராகுல் பட் மும்பையை விட்டு வெளியேற தடை
மும்பை: இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத சதித் திட்டம் தீட்டி அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட அமெரிக்கர் டேவிட் கோல்மேன் ஹெட்லியுடன் தொடர்பு வைத்திருந்தது தொடர்பாக சர்ச்சையில் சிக்கியுள்ள திரைப்படத் தயாரிப்பாளர் மகேஷ்பட்டின் மகனும், நடிகை பூஜா பட்டின் சகோதரருமான ராகுல் பட் மும்பையை விட்டு வெளியேறக் கூடாது என்று தேசிய புலனாய்வு ஏஜென்சி உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் ஹெட்லி தங்கியிருந்தபோது அவருடன் ராகுல் பட்டுக்குத் தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சந்தேக வலைக்குள் ராகுல் பட் கொண்டு வரப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மும்பையை விட்டு அவர் வெளியேறக் கூடாது என்று தேசிய புலனாய்வு ஏஜென்சி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சனிக்கிழமை முதல் மும்பையில் என்.ஐ.ஏ குழுவினர் முகாமிட்டுள்ளனர். ஹெட்லி, ராணா குறித்த தகவல்களை அவர்கள் சேகரித்து வருகின்றனர்.
ஹெட்லி மும்பைக்கு வந்திருந்தபோது, அவருடன் தொடர்பு வைத்திருந்தவர்களிடமிருந்து வாக்குமூலங்களை சேகரித்து வருகின்றனர்.
ஹெட்லியுடன் தொடர்பு வைத்திருந்த 3 பேரை மும்பையிலேயே தங்கியிருக்குமாறு என்ஐஏஎ அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் யார் என்பதை வெளியில் சொல்ல முடியாது.
இந்த மூன்று பேரும் மற்றும் ராகுல் பட் ஆகியோர் போலீஸ் மற்றும் என்ஐஏ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகின்றனர். நான்கு பேரும் சில காலத்திற்கு மும்பையை விட்டு வெளியேறக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே ஹெட்லி, ராணா ஆகியோர் மீது என்ஐஏ வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குஜராத்-மகேஷ் பட் படத்துக்கு சிக்கல்:
இந் நிலையில் இயக்குனர் மகேஷ் பட்டின் படங்களைத் திரையிட குஜராத் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
ராஜ்கோட்டில் அவரது தும் மிலே படத்தை திரையிட்ட ஒரு தியேட்டர் அடித்து நொறுக்கப்பட்டது. மேலும் ஒரு மல்டிபிளக்ஸ் திரையரங்கும் தாக்கப்பட்டது.
இதையடுத்து குஜராத் முழுவதும் இந்தப் படம் தியேட்டர்களை விட்டு தூக்கப்பட்டுவிட்டது.












Click it and Unblock the Notifications