உலகத் தமிழ் செம்மொழி மாநாடு - ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பு
அடுத்த ஆண்டு ஜூன் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஒருங்கிணைப்புக் குழுவை முதல்வர் கருணாநிதி இன்று அறிவித்தார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு...
கோவை 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ந்தேதி முதல் 27-ந் தேதி வரை நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாடு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்தவும், அவற்றை கண்காணிக்கவும், பல்வேறு துறைகளின் பணிகளை ஒருங்கிணைக்கவும், தமிழக அரசின் தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி, தலைமையில் மாநாட்டு ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படுகிறது.
இக்குழுவிற்கு மாநாட்டின் தனி அலுவலர் அலாவுதீன் அமைப்பாளராக செயல்படுவார்.
குழு உறுப்பினர்கள் விவரம்...
மாநாட்டு ஒருங்கிணைப்புக்குழு தலைவர்- தலைமைச் செயலாளர். அமைப்பாளர் - தனி அலுவலர், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு.
உறுப்பினர்கள் - முதன்மைச் செயலர், உள்துறை முதன்மைச் செயலர், நிதித் துறை முதன்மைச் செயலர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர், பொதுத்துறை செயலாளர், தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை செயலர், சுற்றுலா மற்றும் சிறு துறைமுகங்கள் துறை இயக்குநர், காவல் துறை தலைவர், தமிழ்நாடு மின்சார வாரியம், மாவட்ட ஆட்சியர், கோவை.
பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளர்- (காவல் துறை) மேலும் பிற குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்களும் இதில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
இக்குழு முதல்-அமைச்சர் தலைமையிலும், துணை முதல்-அமைச்சர் தலைமையிலும் அமையவுள்ள குழுக்களின் முடிவுகளின் படி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், பல்வேறு துறைகளின் பணிகளையும் ஒருங்கிணைத்து மாநாடு மிகச் சிறப்பாக நடைபெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.