உப்பங்களில் மழைநீர் தேக்கம்- உப்பு உற்பத்தி பாதிப்பு
கன்னியாகுமரி: கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் உப்பளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பால்குளம், கோவாளம், சாமித்தோப்பு, புத்தளம், மணவாளங்குறிச்சி ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு மலை போல் குவித்து வைக்கப்பட்டு தென்னை ஓலை மூலம் நேர்த்தியாக வேயப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படுகிறது.
பின்னர் தேவைக்கு ஏற்ப வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பெய்த தொடர் மழையால் பெரும்பாலான குளங்கள், ஆறுகள் நிரம்பி வருகின்றன.
தொடர் மழையால் உப்பளங்களில் பல அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளது. உப்பளங்களில் தேங்கிய நீர் குறையாததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மழை நீர் வடிய இன்னும் பலநாட்கள் ஆகும் என்பதால் உப்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஏராளமான தொழிலாளர்கள் வேலை இன்றி தவிக்கின்றனர்.