ஆஸி கப்பலிலிருந்து மீதமுள்ள 56 தமிழர்களும் நாளை தரையிறங்க சம்மதம்
இலங்கையிலிருந்து படகில் வந்த 78 தமிழர்களை மடக்கிப் பிடித்த ஆஸ்திரேலியப் படையினர் தங்கள் நாட்டு சுங்கத்துறை ரோந்துக் கப்பலில் ஏற்றி அவர்களை இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது இவர்கள் பிரன்டன் தீவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு அடைக்கலம் கொடுத்தால்தான் கப்பலை விட்டு இறங்குவோம் என அவர்கள் கூறி வந்ததால் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக பெரும் இழுபறி நிலவி வந்தது.
இதையடுத்து முறையாக பரிசீலனை செய்து படிப்படியாக அடைக்கலம் வழங்குவதாக ஆஸ்திரேலிய அரசு கொள்கை அடிப்படையில் சம்மதம் தெரிவித்தது.
இதையடுத்து 22 தமிழர்கள் நேற்று முன்தினம் கப்பலை விட்டு வெளியேறினர். அவர்களை இந்தோனேசிய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள், தான்சுங் பினாங் தீவுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் மீதமுள்ள 56 தமிழர்களும் நாளை கப்பலை விட்டு இறங்க சம்மதித்துள்ளனர். இவர்களில் ஐந்து பேர் பெண்கள், ஐந்து பேர் குழந்தைகள் ஆவர்.
இன்று காலை இந்தோனேசிய அதிகாரிகள் இவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அனைவரும் நாளை கப்பலை விட்டு இறங்க சம்மதம் தெரிவித்தனர்.
மேலும் 41 பேர் வருகை:
இதற்கிடையே, 41 அகதிகளுடன் வந்த படகு ஒன்றை ஆஸ்திரேலியக் கடற்படையினர் வடக்கு ஆஸ்திரேலியா அருகே அஷ்மோர் தீவு அருகே மடக்கி தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவை நோக்கி வந்துள்ள 43வது அகதிகள் படகு இது என்பது குறிப்பிடத்தக்கது.
கண்காணிப்பு விமானம் மூலம் இந்த படகு வருவது தெரிய வந்தது. இதையடுத்து கடற்படையினர் விரைந்து சென்று தடுத்து நிறுத்தினர்.
அஷ்மோர் தீவுகளிலிருந்து 90 கடல் மைல் தொலைவில் இந்தப் படகு தடுத்து நிறுத்தப்பட்டது.
அந்தப் படகில் 41 பயணிகளும், 2 ஊழியர்களும் இருப்பதாக ஆஸ்திரேலியா உள்துறை அமைச்சர் பிரன்டன் ஓ கானர் தெரிவித்துள்ளார்.
இவர்களை கிறிஸ்துமஸ் தீவுக்குக் கொண்டு சென்று அங்கு உடல் நலப் பரிசோதனை, பாதுகாப்பு சோதனை, அடையாளச் சோதனை ஆகியவை மேற்கொள்ளப்படவுள்ளது.
இவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. அனேகமாக இவர்களும் இலங்கையைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.