கர்நாடக சபாநாயகர் ஷெட்டார் மீண்டும் அமைச்சரானார்
பெங்களூர்: முதல்வர் எதியூரப்பா, ரெட்டி சகோதரர்கள் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி கர்நாடக சட்டசபை சபாநாயகர் ஜெகதீஷ் ஷெட்டார் இன்று அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். இதன் மூலம் 2 வது முறையாக அவர் அமைச்சராகியுள்ளார்.
இன்று காலை ராஜ்பவனில் நடந்த எளிய நிகழ்ச்சியில் ஷெட்டார் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் பதவிப்பிரமாண் செய்து வைத்தார்.
முதல்வர் எதியூரப்பா, அமைச்சர்கள், ரெட்டி சகோதரர்கள், பாஜக தலைவர் சதானந்த கெளடா உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
ஷெட்டாருக்கு பொதுப்பணித்துறை வழங்கப்படும் எனத் தெரிகிறது.
முன்னதாக, அமைச்சரவையில் சேருவதற்கு வசதியாக நேற்று தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார் ஷெட்டார்.
வட கர்நாடகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஷெட்டார். ஷெட்டார் குடும்பமே அரசியல் குடும்பமாகும். அவரது தந்தை ஹூப்ளி மாநகராட்சிக்கு ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும், மாநகராட்சியின் முதல் பாஜக மேயராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர்.
1990 முதல் பாஜகவில் வளர்ச்சியைச் சந்தித்து வந்தார் ஷெட்டார். ஹூபளி ஊரக பாஜக தலைவராகவும், பின்னர் தார்வாட் மாவட்ட தலைவராகவும் இருந்தவர். 1999ம் ஆண்டு மாநில சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார்.
அரசியலுக்கு வருவதற்கு முன்பு 20 வருட காலம் வக்கீலாகப் பணியாற்றியவர் ஷெட்டார். 2005ம் ஆண்டு கர்நாடக பாஜக தலைவராகவும் இருந்துள்ளார். 2008ல் நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற முக்கியக் காரணமாகவும் இருந்தவர் ஷெட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.