மனீஷ் திவாரிக்குப் பதில் மனோஜ் திவாரியை தவறாக தாக்கி விட்டதாம் சிவசேனா!
மும்பை: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரியைத்தான் தாக்க குறி வைத்திருந்தோம். ஆனால் தவறுதலாக எங்களது தொண்டர்கள் நடிகர் மனோஜ் திவாரி வீட்டைத் தாக்கி விட்டனர். இதற்காக வருத்தப்படுகிறோம் என்று கூறியுள்ளது சிவசேனா.
மகா மோசமான அரசியலில் குதித்துள்ளன சிவேசனாவும், ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியும்.
இரு கட்சிகளுக்கும் இடையே தற்போது யார் மண்ணின் மைந்தர்கள் கொள்கையை கட்டிக் காத்து கொடி பறக்க வைப்பது என்பதில் பெரும் சண்டை. இதனால் யார் யார் சிக்குகிறார்களோ அவர்களை வைத்து அராஜக அரசியலை நடத்தி வருகிறார்கள் இருவரும்.
லேட்டஸ்டாக சச்சின் டெண்டுல்கர், நான் ஒரு இந்தியன், பிறகுதான் மகாராஷ்டிரன், மும்பை அனைவருக்கும் சொந்தம் என்று தெரியாத்தனமாக சொல்லி விட்டார். உடனே பாய்ந்து விட்டார் பால் தாக்கரே.
அத்தோடு நில்லாமல் போஜ்பூரி நடிகரும், பாடகருமான மனோஜ் திவாரியின் வீட்டையும் சிவசேனா கட்சியினர் நேற்று தாக்கி சேதப்படுத்தி விட்டனர்.
ஆனால் தற்போது தாங்கள் அடிக்க நினைத்தது மனோஜ் திவாரியை அல்ல, மாறாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரியின் வீட்டைத்தான் என்று விளக்கம் அளித்துள்ளது சிவசேனா.
இதுகுறித்து சிவசேனா மூத்த தலைவர் திவார் ரவோத் கூறுகையில், உண்மையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரிதான் எங்களது இலக்கு. அவர்தான் பால் தாக்கரேவுக்கு எதிராக கருத்து கூறியிருந்தார். ஆனால் மனோஜ் திவாரி தாக்குதலுக்குள்ளாகி விட்டார். தவறு நடந்து விட்டது. இதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்லும் உரிமை உள்ளது. அதேசமயம், பால் தாக்கரேவுக்கு எதிராக பேசியுள்ள மனீஷ் திவாரியின் பேச்சை பொறுத்துக் கொள்ளமுடியாது என்றார்.
சிவசேனாவின் விளக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் மனோஜ் திவாரி, அவர்கள் வருத்தம் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளதால், இதை நானும் பெரிதுபடுத்த விரும்பவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications