78 தமிழர்களும் இந்தோனேசியாவில் தங்க அனுமதி
ஜகார்த்தா: இலங்கையிலிருந்து படகில் வந்து தற்போது எங்கு கொண்டு செல்லப்படப் போகிறோம் என்று தெரியாமல் அலை பாய்ந்து கொண்டிருக்கும் 78 தமிழர்களையும் தங்களது நாட்டிலேயே தங்க வைக்க இந்தோனேசியா முடிவு செய்துள்ளது.
அதன்படி முதல் கட்டமாக இந்த 78 பேரும் ஆறு மாதங்களுக்கு இந்தோனேசியாவில் தங்க வைக்கப்படுவர். அதற்கான செலவுகளைத் தர ஆஸ்திரேலிய அரசு சம்மதித்ததைத் தொடர்ந்து இந்த அனுமதியை வழங்கியுள்ளது இந்தோனேசியா.
கடந்த 25 நாட்களுக்கும் மேலாக கப்பலை விட்டு இறங்க மறுத்து வந்த 78 பேரும், ஆஸ்திரேலிய அரசு அளித்த உறுதிமொழியைத் தொடர்ந்து இரண்டு கட்டங்களாக கப்பலை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதையடுத்து இவர்களை ரியாவ் பகுதியில் உள்ள தான்சுங் பினாங்கில் உள்ள குடியேற்றப் பிரிவு முகாமுக்குக் கொண்டு செல்கிறது இந்தோனேசியா.
அங்கு அவர்கள் ஆறு மாத காலத்திற்கு தங்க வைக்கப்படுவர் என்று இந்தோனேசியா மனித உரிமைப் பிரிவு அலுவலக தலைவர் ஜெடே விதஹார்தா கூறினார்.
முதல் கட்டமாக 22 தமிழர்கள் வெள்ளிக்கிழமை பினாங் கொண்டு செல்லப்பட்டனர். 2வது கட்டமாக இன்று 56 பேர் பினாங் கொண்டு செல்லப்படுவர்.
விசாரணையின்றி சிறையில் வாடும் தமிழர்கள்:
இந் நிலையில் கொழும்பி்ல் உள்ள ராணுவ சிறைச்சாலையில் 600க்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் இன்னமும் எவ்வித விசாரணையுமின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை நாடாளுமன்றத்தில் தீவிரவாத தடுப்பு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதை தற்காலிக நடவடிக்கையாக இலங்கை அரசு குறிப்பிட்டது. ஆனால், இந்த கடுமையான சட்டத்தின் மூலம் இதுவரை 10,000க்கும் மேற்பட்ட தமிழர்களை தான்தோன்றித்தனமாக இலங்கை அரசு கைது செய்துள்ளது.
எவ்வித ஆதாரமும் இன்றி, வழக்கு விசாரணை இன்றி அரசியல் கைதிகளாக வெளிகடா, கலுதாரா உள்ளிட்ட சிறைகளில் ஆயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை அரசு அடைத்து சித்ரவதை செய்தது. பல ஆண்டுகளாக இந்த சிறைகளில் வாடுபவர்களில் சிறுவர்களும் அடக்கம்.
இவர்களை ஆதாரத்தின் அடிப்படையில், முறையாக விசாரித்து நீதிமன்ற உத்தரவின் படி நடவடிக்கை எடுக்கவேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் என கோரி மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன. ஆனால், அரசியல் கைதி என்பதே இலங்கையில் கிடையாது என கூறிவந்த இலங்கை அரசு, ஐ.நா மனித உரிமை அமைப்பின் வற்புறுத்தலுக்குப் பிறகு ஆங்காங்கே சிலரை மட்டும் விடுவித்து வருகிறது.
கொழும்பில் உள்ள மெகசின் சிறையில் இருபது தமிழ் கைதிகள், அட்டர்னி ஜெனரல் உத்தரவின் படி, விடுதலை செய்யப்பட்டனர். எனினும் மெகசின் சிறையில் இன்னும் 600 தமிழ் அரசியல் கைதிகள் எந்த விதமான விசாரணைக்கும் உட்படுத்தப்படாமல் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.