உள்ளூர் மக்களுக்கு வேலை-வலியுறுத்தல்
காஞ்சீபுரம்: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டியது அங்குள்ள தொழில் நிறுவனங்களின் கடமை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், தொகுதி எம்.பியுமான டி.ஆர்.பாலு கூறினார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சந்தோஷ் மிஸ்ரா தலைமை வகித்தார். ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. டி.ஆர்.பாலு, போலீஸ் சூப்பிரண்டு பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் ஹீண்டாய், நோக்கியா உட்பட 42 நிறு வனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு பின் டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறியதாவது:
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் படித்த இளைஞர்கள் மற்றும் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு வேலை வாய்ப்புதர வேண்டும் என்ற கோரிக்கையை நிறுவனங்களின் அதிகாரிகளிடம் முன் வைத்துள்ளோம்.
தேர்தல் பிரசாரத்தின் போது இந்தப்பகுதி மக்களுக்கு அங்குள்ள நிறுவனங்கள் வேலை தருவதில்லை என மக்கள் புகார் கூறினர். கல்வித்தகுதி இல்லாதவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், பெண்களுக்கு வேலையில் முன்னுரிமை தர வேண்டும், உள்ளூர் மக்களுக்கு வேலை அளிப்பது இந்நிறுவனங்களின் கடமை.
மேலும் இந்த ஆண்டு படித்த இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கியது குறித்த சாதனை விளக்க கையேடு மாவட்ட நிர்வாகம் மூலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்படும்.
கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தனியார் நிறுவன உயர் அதிகாரிகள் கூறினர்.
இவ்வாறு டி.ஆர்.பாலு கூறினார்.