ஏர் ஹோஸ்டஸிடம் விமானிகள் தவறாக நடக்கவில்லை-மகளிர் ஆணையம்
டெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் ஏர் ஹோஸ்டஸிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில், இரு விமானிகள் மீதான புகார் தவறு, அவர்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்று தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 3ம் தேதி ஏர் இந்தியா விமானம் ஷார்ஜாவிலிருந்து வந்தபோது நடு வானில் விமானிகள் ரன்பீர் அரோரா, ஆதித்ய சோப்ரா ஆகியோருக்கும், ஏர் ஹோஸ்டஸ் கோமல் சிங்குக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அவர்களுக்கிடையே அடிதடி தகராறு பத்திரமாக தரையிறங்குவோமா என்று பயணிகள் பீதியடைந்தனர்.
பின்னர் தரையிறங்கியதும் கோமல் சிங், இதுகுறித்து மகளிர் ஆணையத்திடம் புகார் கொடுத்தார். அதில் தன்னிடம் விமானிகள் தவறாக நடக்க முயன்றதாக கூறியிருந்தார்.
இதையடுத்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியது. இதில் செக்ஸ் முறைகேடோ, அத்துமீறலோ நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று காக்பிட்டுக்குள் கோமல் சிங் நுழைந்துள்ளார். இதையடுத்து விமானிகளுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விமானிகளால் கோமல் சிங் கீழே தள்ளப்பட்டார். அவ்வளவுதான் நடந்தது. வேறு எந்த செக்ஸ் முறைகேடும் நடைபெறவில்லை என்று அது தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஏர் இந்தியா நிறுவனம் நடத்திய விசாரணையிலும் விமானிகள் செக்ஸ் அத்துமீறலில் இறங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.