லாரியை 'ஓவர்டேக்' செய்தபோது விபத்து- பலி 3
நெல்லை: நெல்லை அருகே நேற்று அதிகாலை லாரி மீது கார் மோதியதில் ஓய்வு பெற்ற அதிகாரி உட்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாகர்கோவில் வடிவீஸ்வரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். ஓய்வு பெற்ற தொலைத்தொடர்புத் துறை அதிகாரி. இவரது மனைவி மனுகாந்தி. ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
நேற்று அதிகாலை இவர்கள் இருவரும் தங்கள் உறவினர்களுடன் நெல்லை மற்றும் திருச்செந்தூர் கோயிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
காரை நாகர்கோவிலைச் சேர்ந்த முத்து கிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்தார். வள்ளியூரை அடுத்த தளபதி சமுத்திரம் என்ற இடத்தில், முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக கார், லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. கார் டிரைவர் முத்து கிருஷ்ணன் மற்றும் சுப்பிரமணியன், அவரது உறவினர் அருந்ததி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.
காரில இருந்த மனுகாந்தி, செல்வி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த வள்ளியூர், நாங்குநேரி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று செல்வி மற்றும் மனுகாந்தியை மருத்துவமனையில் சேர்த்தனர்.