சர்வதேச தரத்துக்கு மாறுகிறது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்
அடுத்த ஐந்தாண்டுகளில் தேசிய அளவில் மூன்று ரயில் நிலையங்களை சர்வதேச தரத்துக்கு உயர்த்த ரயில்வே திட்டமிட்டிருந்தது. இதில் சென்னை சென்ட்ரலும் ஒன்று. இதற்காக சென்ட்ரல் நிலையக்கென ஏற்கனவே மத்திய அரசு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது.
தென்னிந்தியாவில் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேகமாக வளர்ந்து வரும் நகரம் என்ற அடிப்படையிலும், நூற்றாண்டு பாரம்பரியம் கொண்டது என்பதாலும் சென்ட்ரல் நிலையம் மேம்படுத்த வேண்டியது முக்கியமானதாக கருதப்படுகிறது.
ரயில் நிலையத்தின் உள்கட்டமைப்பு, பயணிகளுக்கான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றில் உலகத் தரத்துக்கு இணையாக அடு்த்த 5 ஆண்டுக்குள் சென்ட்ரல் நிலையம் மாறிவிடும். நிலையத்தின் உள்ளே எஸ்கலேட்டர்கள், வாக்கவேட்டர்கள், எலிவேட்டர்கள் போன்றவையும் ரயில் நிலையத்தை ஒட்டி நவீன வசதிகளுடன் கூடிய வணிக வளாகங்கள் மற்றும் சுழலும் அடுக்குமாடி பார்க்கிங் வசதி போன்றவை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வமான ஆலோசனை கூட்டமும் சென்னையில் நடைபெற்றது. தெற்கு ரயில்வே, சென்னை மாநகராட்சி, சென்னை மெட்ரோ ரயில் கார்பொரேஷன் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளின் அரசு அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதில், சென்ட்ரல் ரயில் நிலையத்தை உலகத் தரத்துக்கு மேம்படுத்தும் திட்டத்தை கையாள ஒரு ஆலோசனை நிறுவனத்தை (கன்சல்டன்சி) விரைவில் இறுதி செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கன்சல்டன்சி நிறுவனம் இறுதி செய்யப்பட்டவுடன் இதற்கான முழு வரைவு திட்டம் தயாரிக்கப்படும். அதன் பின் உடனடியாக பணிகள துவங்கும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இத்துடன், சென்ட்ரலை ஒட்டியுள்ள சால்ட் கோட்டர்ஸ் பகுதியையும் நிலையத்தின் மற்றொரு முனையமாக மாற்ற திட்டமிடப்படுகிறது. இங்கு நட்சத்திர அந்தஸ்துள்ள தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், 24 மணி நேரமும் செயல்படும் வணிக வளாகங்கள், தியேட்டர்கள், நீச்சல்குளங்கள் ஆகியவை கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பூர்வாங்க மதிப்பீடுகள், செயல் திட்டங்களை வகுக்க அங்கீகாரம் பெற்ற முகமையாக சி.எம். டி.ஏ. தேர்வு செய்யப்பட உள்ளது.