வண்டலூர் பூங்காவிலிருந்து யானைகள் இடமாற்றம்!
சென்னை: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள நான்கு யானைகள் விரைவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளன.
யானைகளை உயிரியல் பூங்காக்களில் வைக்க இந்திய உயிரியல் பூங்காக்களின் ஆணையம் தடை விதித்து கடந்த 7ம் தேதி உத்தரவிட்டது. மிகப் பெரிய பிராணிகளான யாணைகள் காடுகளில் நீண்ட தூரம் அலைந்து திரியக்கூடியவை. ஆனால், நம் நாட்டில் உள்ள வனவிலங்கு பூங்கா, மிருகக்காட்சி சாலைகள் பெரும்பாலானவற்றில் இதற்கு போதிய இடம் கிடையாது.
குறுகிய இடங்களில் நாள் கணக்கில் யானைகளை கட்டி வைப்பதால், அவை குரூரத்தன்மைக்கு ஆளாக்கப்படுகிறது. மேலும் கலவிக்காலங்களில் தனது சுதந்திரம் பாதிக்கப்படுவதால், வெகுண்டெழும் யானைகளால் பாதுகாப்பு அச்சுறுத்தலும் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி யானைகளை பராமரிப்பதற்கான செலவினங்களையும் உயிரியல் பூங்காக்களால் எதிர்கொள்ள முடியவில்லை.
இதுபோன்ற பல்வேறு காரணங்களால், யானைகளை உயிரியல் பூங்காக்களில் இருந்து, அருகில் உள்ள முகாம்களுக்கோ அல்லது வனத்துறை பகுதிகளுக்கோ இடம் மாற்ற ஆணையம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து சென்னை வண்டலூர் பூங்காவில் உள்ள மூன்று பெரிய யானைகள் மற்றும் குழந்தைகளை சவாரி செய்து குதூகலப்படுத்தும் குட்டி யானை ஆகியவை வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளன. யானைகளை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய ஊழியர்கள் தயாராகி வருகின்றனர்.