ஹெட்லியுடன் தொடர்பில்லை: கங்கணா-ஆர்த்தி
டெல்லி: இந்தியாவுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டி கைதான அமெரிக்கர் டேவிட் கோல்ட்மேன் ஹெட்லியுடன் எனக்கு எந்த அறிமுகமும், நட்பும், தொடர்பும் கிடையாது என்று பாலிவுட் நடிகை கங்கணா ரணவத் கூறியுள்ளார்.கங்கணா ரணவத் உள்ளிட்ட இரு நடிகைகளை, ராகுல் பட், ஹெட்லிக்கு அறிமுகப்படுத்தி வைத்ததாக கூறப்படுகிறது. இந்தத் தகவலை ராகுல் பட்டே, தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளிடம் கூறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இவர்கள் தவிர பாலிவுட்டைச் சேர்ந்த பலருடனும் ஹெட்லிக்குத் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பாலிவுட் வட்டாரம் பரபரப்பாகியுள்ளது. இந்த நிலையில் ராகுல் பட் அறிமுகப்படுத்தி வைத்த நடிகைகளில் கங்கணாவும் ஒருவர் எனக் கூறப்படுகிறது.
கங்கணா, தமிழில், தாம் தூம் படத்தில் நடித்தவர் ஆவார். ஆனால் தனக்கு ஹெட்லியைத் தெரியாது என்று கூறியுள்ளார் கங்கணா.
இதுகுறித்து அவர் தனது பிளாக்கில் எழுதியிருப்பதாவது...
மும்பையில் ஹெட்லியை சந்தித்த நடிகைகள் பெயரில் எனது பெயரையும் சேர்த்துக் கூறி வருகிறார்கள். இதில் உண்மை இல்லை.
எனக்கும், ஹெட்லி என்ற பெயருடைய எந்த நபருக்கும் எந்தவித அறிமுகமும், நட்பும், தொடர்பும் கிடையாது. அப்படி யாரையும் எனக்கு நினைவிலும் இல்லை. இதை அதிகாரப்பூர்வமாக நான் சொல்கிறேன் என்று கூறியுள்ளார் கங்கணா.
அதே போல நடிகை ஆர்த்தி சாப்ரியாவும் ஹெட்லியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அவரும் அதை மறுத்துள்ளார்.
நேற்று மாலை மும்பை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு கொடுத்த ஆர்த்தி,
அமெரிக்காவில் பிடிபட்ட தீவிரவாதி ஹெட்லியுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவல்கள் தவறானவை. என்னைப் பற்றிய இந்த வதந்தியை திட்டமிட்டு யாரோ பரப்பி விட்டுள்ளனர்.
தீவிரவாதி ஹெட்லியை யார் என்றே எனக்குத் தெரியாது. மகேஷ்பட் மகன் ராகுல்பட் கூட எனக்கு அறிமுகம் இல்லை.
கடந்த 13 ஆண்டுகளாக நான் சியாம் நிவாஸ் பகுதியில் வசித்து வருகிறேன். கடந்த 4 ஆண்டுகளாக உடற்பயிற்சி கூடத்துக்கு போய் வருகிறேன். அங்கு ஹெட்லி வந்ததாக சொல்கிறார்கள்.
இதை வைத்து ஹெட்லிக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது.
போலீசார் இதில் உடனடியாக தலையிட்டு என்னை பற்றி வதந்தி பரப்பியது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வதந்தியால் நான் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளேன். தேவைப்பட்டால் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.
பதில் சொல்ல இம்ரான் மறுப்பு:
இந் நிலையில் ஹெட்லியை இம்ரான் ஹஸ்மி சந்தித்துள்ளதாகக் கூறப்படுவது குறித்து ஹஸ்மியிடம் நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது பதில் சொல்ல அவர் மறுத்துவிட்டார்.
அவரை வைத்து தும் மிலே என்ற படத்தை இயக்கி வரும் டைரக்டர் குனல் தேஷ்முக் கூறுகையில், எங்கள் படப்பிடிப்பு அரங்குக்குள் ஹெட்லி என்பவர் வந்ததே இல்லை. நான் சூட்டிங் நடத்தும் போது என் பெற்றோர் கூட உள்ளே வரமுடியாது. அப்படி இருக்கும்போது ஹெட்லி சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து இம்ரான் ஹஸ்மியை சந்தித்ததாக தேவை இல்லாமல் கதை விடுகிறார்கள் என்றார்.
மகேஷ் பட் வேதனை:
இயக்குனர் மகேஷ் பட் கூறுகையில், என் மகன் ராகுல் பட் இந்த வழக்கில் போலீசுக்கும், விசாரணைக் குழுக்களுக்கும் உதவுகிறான். நாட்டு பாதுகாப்பு விஷயத்தில் தானாக முன்வந்து உதவும் அவனை சந்தேகப்படும் அளவுக்கு தொலைக்காட்சிகள் மோசமாக சித்தரிக்கின்றன என்றார் கவலையுடன்.
ராணாவின் ஜாமீன் கோரிக்கை-ஒத்திவைப்பு:
இதற்கிடையே ஹெட்லியுடன் இணைந்து இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத சதித் திட்டத்தில் ஈடுபட்டு கைதான பாகிஸ்தானில் பிறந்த கனடியரான தஹவூர் ஹூசேன் ராணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு அமெரிக்க கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
சிகாகோவில் உள்ள கோர்ட்டில், ராணா ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதி நான் நோலன், டிசம்பர் 2ம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்தார்.
முதலில் இந்த வழக்கு நவம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. பின்னர் நவம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது டிசம்பர் 2ம் தேதிக்கு விசாரணை தள்ளிப் போயுள்ளது.