இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிக அணு ஆயுதங்கள்!- யுஎஸ்

புல்லடின் ஆப் அடாமிக் சயின்ஸ் என்ற இதழில், ராபர்ட் எஸ் நாரிஸ் மற்றும் ஹனஸ் எம் கிரிஸ்டின்சன் ஆகிய இரு அமெரிக்க விஞ்ஞானிகளும் எழுதியுள்ள கட்டுரையில்,
சீனா, பாகிஸ்தான், இந்தியா ஆகியவை போட்டிபோட்டுக் கொண்டு அணு ஆயுதங்களை பெருக்கி வருகின்றன. பாகிஸ்தான் 70 முதல் 90 வரையிலான அணு ஆயுதங்களை வைத்துள்ளது. இந்தியா 60 முதல் 80 வரை வைத்துள்ளது. அவை எந்தெந்த இடங்களில் பாதுகாக்கப்படுகின்றன எனபதை அடையாளம் காண்பது சிரமம்.
உலகம் முழுவதும் 14 நாடுகளில் சுமார் 23,360 அணு ஆயுதங்கள் உள்ளன. அவற்றில் பாதியளவு செயல்படும் நிலையில் உள்ளன.
ரஷ்யாவில் 13,000, அமெரிக்காவிடம் 9,400, பிரான்ஸ் நாட்டிடம் 300, சீனாவிடம் 240 அணு ஆயுதங்கள் உள்ளன.
இந்த வரிசையில் பாகிஸ்தான் 7வது இடத்திலும் வட கொரியா கடைசி இடத்திலும் உள்ளன என்று கூறியுள்ளனர் விஞ்ஞானிகள்.
காட்டிக் கொடுத்த முஷாரப்-ஏ.க்யூ.கான் தாக்கு:
இந் நிலையில் பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் குறித்த பல ரகசியங்களையும் அமெரிக்காவிடம் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் காட்டிக் கொடுத்துவிட்டதாக அந் நாட்டு அணு விஞ்ஞானியான ஏ.க்யூ.கான் குற்றம் சாட்டியுள்ளார்.
வட கொரியா, ஈரானுக்கு அணு ஆயுத தயாரிப்பு ரகசியங்களை விற்றதற்காக அமெரி்க்க நிர்பந்தத்தால் முஷாரபால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டவர் கான்.
இந் நிலையில் அவர் அளித்தள்ள பேட்டியில், முஷாரப் ஒரு அமெரிக்க அடிமை, கைக்கூலி.
1982ம் ஆண்டில் இரு அணு ஆயுதங்கள் தயாரிக்கத் தேவைப்படும் யுரேனியத்தையும் அதற்கான டிசைனையும் சீனா பாகிஸ்தானுக்கு தந்தது உண்மை தான். இந்தத் தகவலை அமெரிக்காவுக்கு லீக் செய்தது முஷாரப் தான்.
என்னை அமெரிக்காவிடம் ஒப்படைக்கக் கூட அவர் தயாராக இருந்தார். ஆனால், அப்போதைய பிரதமர் மிர் சபருல்லா கான் அதற்கான உத்தரவில் கையெழுத்திட மறுத்ததால் தப்பினேன். இல்லாவிட்டால் என்னை தனி விமானத்தில் ஏற்றிச் சென்று அமெரிக்காவிடம் ஒப்படைத்து அந் நாட்டு சிறையில் அடைத்திருப்பார்கள்.
ஒரு நாட்டின் ரகசியத்தைக் கூட பாதுகாக்கத் தெரியாத நபர் எல்லாம் அதிபராக இருந்தது கேவலம் என்று கூறியுள்ளார் கான்.
பெனாசிர் கொலை-முஷாரப்பிடம் ஐ.நா விசாரணை:
இந் நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும் ஐ.நா. குழு பாகிஸ்தானின் பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தக் கொலை வழக்கு குறித்து முஷாரப்பிடமும் விசாரணை நடத்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 17 பேர் பலி
இதற்கிடையே பாகிஸ்தானின் பெஷாவர் நகர நீதிமன்ற வளாகத்துக்கு அருகே இன்று மதியம் நடந்த பயங்கர தற்கொலைப்படை தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். 45க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பெஷாவரில் உயர்மட்ட பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதியான கைபர் ரோட்டில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் பிரதான வாயிலுக்கு பக்கத்திலேயே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications