2 நாளில் தமிழகத்தில் மீண்டும் மழை அதிகரிக்கும்

இன்றைய மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை...
தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக திருப்புவனத்தில் 10 செமீ மழை பெய்துள்ளது.
முத்துப்பேட்டையில் 8 செமீ, ஆலங்குடி, அதிராம்பட்டினம் ஆகிய இடங்களில் தலா 7 செமீ மழை பெய்துள்ளது.
நீடாமங்கலம் 6, சென்னை விமான நிலையம், போரவூரணி, குடவசால், திருச்செந்தூர் தலா 5, செம்பரம்பாக்கம், சாத்தனூர் அணை, திருப்பத்தூர், சூளகிரி தலா 4, பரங்கிப்பேட்டை, மன்னார்குடி, வேதாரண்யம், ராஜபாளையம் தலா 3, உத்திரமேரூர், ஆர்.கே.பேட்டை, விருத்தாச்சலம், வானூர், ஒட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, போளூர், போச்சம்பள்ளி, குன்னூர், திருப்பத்தூர் தலா 2, பள்ளிப்பட்டு, கும்பகோணம், காஞ்சிபுரம், ஓரத்தநாடு, பட்டுக்கோட்டை, சீர்காழி, கொல்லிடம், ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி, ராமநாதபுரம், தொண்டி, பாளையங்கோட்டை, மணியாச்சி, சூரங்குடி, ஓசூர், ஊத்தங்கரை, ஏற்காடு, கோவை விமான நிலையம், காரைக்குடி தலா 1 செமீ மழை பெய்துள்ளது.
21ம் தேதி காலை வரையிலான காலகட்டத்துக்கான வானிலை முன்னறிவிப்பு..
தமிழகத்தின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தமட்டில், அடுத்த 24 மணி நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வானம் மேகமூட்டமாக இருக்கும்.
அடுத்த 2 நாட்களில் கடலோரத் தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும். உட்புறத் தமிழகத்தில் எந்தவித குறிப்பிடத்தக்க மாற்றமும் இருக்காது.
நீலகிரி..மீண்டும் மழை-விடுமுறை
இந் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் கன மழை பெய்து வருகிறது. இதனால் இரு ஊர்களைத் தவிர மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
2 கட்டமாக பெய்த கன மழையால் நீலகிரி மாவட்டம் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்தது. இந்த பாதிப்பிலிருந்து இன்னும் அது முழுமையாக மீளவில்லை.
நிலச்சரிவுகள், மண்ணில் புதைந்து போன வீடுகள், மரித்துப் போன உயிர்கள், துண்டிக்கப்பட்ட சாலைகள், வீ்ழந்து போன மரங்கள் என சிதிலமாகி விட்டது நீலகிரி. இவற்றை சரி செய்யும் பணிகள் போர்க்கால வேகத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் மீண்டும் கன மழை பெய்து வருவதால் மீண்டும் சோகத்தில் மூழ்கியுள்ளது நீலகிரி மாவட்டம்.
கூடலூர், பந்தலூர் தவிர மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் பாட்டீல் அறிவித்துள்ளார்.
மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மக்கள் நிலச்சரிவு பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
நிலச்சரிவு, மழை காரணமாக கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் நேற்றுதான் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மின்னல் தாக்கி மீனவர் பலி:
திருச்செந்தூர் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர் மின்னல் தாக்கியதில் பலியானார்.
திருசெந்தூர் வீரபாண்டியன் பட்டிணம் தூய சவேரியர் காலனி பகுதியை சேர்ந்த குமார் நேற்று திருச்செந்தூர் கடல் பகுதியில் சக மீனவர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது மின்னல் தாக்கி படுகாயமடைந்தார். உடனடியாக படகு கரைக்கு திருப்பப்பட்டு திருச்செந்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிக்சை பலனின்றி குமார் பலியானார்.












Click it and Unblock the Notifications