யாழ்ப்பாண சாலை-சிறப்பு அனுமதி தேவையில்லை!
கொழும்பு: யாழ்ப்பாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்வோருக்கு எந்தவித பயண அனுமதியும் தேவையில்லை. ஏ9 சாலையில் பயணம் செய்ய பாதுகாப்பு அனுமதியும் பெறத் தேவையில்லை என்று இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு சிறப்பு அனுமதி பெறத் தேவையில்லை என்று வடக்கு மாகா ஆளுநர் சந்திரசிறி தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்பு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்பவர்கள், பாதுகாப்பு அமைச்சகத்திடமிரு்நது சிறப்பு அனுமதியைப் பெற வேண்டியிருந்தது.
இருப்பினும் யாழ்ப்பாணத்துக்கும் வெளிமாவட்டங்களுக்கும் இடையிலான நேரடி பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், வெளிமாவட்டங்களுக்கு செல்ல விசேஷ அனுமதி பெற வேண்டும் என்ற முறையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில் அதை ரத்து செய்வதாக நேற்று சந்திரசிறி அறிவித்தார். அதன்படி, தேசிய அடையாள அட்டையை வைத்துள்ள அனைவருக்கும் எந்தவித தடையும் இல்லாமல், வடக்கிலிருந்து தெற்குக்கு செல்ல முடியும்.
தங்களது பயணத்தின் போது பயணிகள் கட்டாயமாக மூன்று தேசிய அடையாள அட்டை பிரதிகளை எடுத்து வரவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தடை நீக்கம் மூலம், ஏ 9 சாலையில் செல்ல தற்போது எந்தவிதத் தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கிலிருந்து தெற்குக்குச் செல்லும் ஒரே தரைப்பாதை இந்த ஏ9 சாலை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாலையை சமீபத்தில்தான் இலங்கை அரசு திறந்து விட்டது. இருப்பினும் பல்வேறு தடைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்ததால் யாழ்ப்பாண மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். தற்போது இது நீங்கியுள்ளது.
ஆனால் கட்டுப்பாடுகளை அரசு நீக்கியுள்ளதற்கு முக்கியக் காரணமாக, விரைவில் வரப் போகிற அதிபர் தேர்தலே காரணம் எனக் கூறப்படுகிறது. அதிபர் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளைக் கவர ராஜபக்சே தீவிரமாக இருப்பதால் தமிழர்களுக்கு சந்தோஷம் தரும் வகையில் ஏ9 சாலை கட்டுப்பாடுகளை நீக்க அவர் உத்தரவிட்டிருப்பதாக கருதப்படுகிறது.
இதுதவிர தமிழர்களை வளைப்பதற்காக மேலும் பல சலுகைளையும் ராஜபக்சே அரசு விரைவில் அள்ளி வீசலாம் என்றும் கருதப்படுகிறது.
22 தமிழர்களுக்கு புகலிடம் அளிக்க ஆஸி சம்மதம்:
இதற்கிடையே ஆஸ்திரேலியாவின் ஓசியானிக் வைகிங் கப்பலில் கடந்த 30 நாட்களாக தவித்து வந்த 78 இலங்கைத் தமிழர்களும் தற்போது கப்பலை விட்டு இறங்கி விட்டனர். அவர்களில் 22 பேரை ஆஸ்திரேலியாவில் குடியேற்றம் செய்ய ஆஸ்திரேலிய அரசு உறுதியளித்துள்ளது. ஆனால் மற்றவர்கள் நிலை குறித்து தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது.
படகு மூலம் இலங்கையிலிருந்து வெளியேறிய இந்தத் தமிழர்கள் ஆஸ்திரேலியா நோக்கி வந்தபோது ஆஸ்திரேலிய அதிகாரிகள் இவர்களைத் தடுத்து தங்களது ரோந்துக் கப்பலான ஓசியானிக் வைகிங்கில் ஏற்றி இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் தங்களுக்குப் புகலிடம் கொடுத்தால்தான் கப்பலை விட்டு இறங்குவோம் என தமிழர்கள் கூறியதால் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 30 நாட்களாக இழுபறி நிலவி வந்தது.
இந்த நிலையில் அரசியல் புகலிடம் தருவது குறித்து ஆஸ்திரேலிய அரசு கொள்கை அடிப்படையி்ல் சம்மதம் தெரிவித்தது. எழுத்துப் பூர்வமாகவும் இதை தெரிவித்தது.
இதையடுத்து கப்பலை விட்டு இறங்க தமிழர்கள் ஒப்புக் கொண்டனர். அதன்படி முதல் கட்டமாக 22 தமிழர்கள் கப்பலை விட்டு இறங்கினர். அவர்களை இந்தோனேசியா அதிகாரிகள், தான்சுங் பினாங் தீவுக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று மீதமுள்ள 56 பேரும் கப்பலை விட்டு இறங்கினர். அவர்களும் பினாங் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு வைத்து அனைவரின் புகலிடக் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படவுள்ளன.
இந்த நிலையில் முதலில் கப்பலை விட்டு வெளியேறிய 22 பேரையும் ஆஸ்திரேலியாவில் குடியேற்றம் செய்ய வைக்க அந்த நாட்டு அரசு உறுதியளித்துள்ளாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் மீதமுள்ள 56 பேர் எங்கு குடியேற்றப்படுவார்கள் என்பது குறித்துத் தெரியவில்லை.
இருப்பினும் சில காலத்துக்கு இவர்கள் இந்தோனேசியா முகாமிலேயே தங்க வைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. அதுவரை அவர்களுக்கு ஆகும் செலவுகளை இந்தோனேசிய அரசுக்கு ஆஸ்திரேலியா வழங்கும்.