விலை நிர்ணயம்-டெல்லியை உலுக்கிய கரும்பு விவசாயிகள்
டெல்லி: மத்திய அரசின் புதிய கரும்பு விலை மற்றும் கொள்முதல் விலைக் கொள்கையை வாபஸ் பெறக் கோரி உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.
கரும்புகளுடன் குவிந்த அவர்கள் ராம்லீலா மைதானத்திலிருந்து ஜந்தர் மந்தர் வரை பேரணியாகச் சென்றனர். பின்னர் அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அஜீத் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம், மகேந்திர சிங் திகாயத்தின் பாரதிய கிஸான் யூனியன் மற்றும் ராஷ்டிரிய கிஸான் மஸ்தூர் சங்கம் ஆகியவை இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தின.
மத்திய அரசு புதிய கரும்பு விலை மற்றும் கொள்முதல் விலைக் கொள்கையை அறிவித்துள்ளது. அதன்படி, குவின்டால் ஒன்றுக்கு கரும்புக்கு ரூ.129.85 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அடிமாட்டு விலை என்று விவசாயிகள் எதிர்ப்புக் குரல் தெரிவித்து வருகின்றனர்.
குறைந்தது ரூ. 250 விலை தரப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்று தேசிய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் அனில் சிங் கூறியுள்ளார்.