சுனாமி திட்டத்தில் மோசடி-பொறியாளர் தலைமறைவு
ராமநாதபுரம்: சுனாமி திட்டத்தில், 4,050 சிமென்ட் மூட்டையை கடத்தி வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்த மாவட்ட திட்ட அலுவலக இளநிலை செயற்பொறியாளர் சுப்பிரமணியனை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில், திட்ட செயலாக்க அலுவலகத்தின் கீழ், கடலோர பகுதிகளில் மீனவர்களுக்கு சுனாமி வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
மண்டபம் சுனாமி வீடுகள் கட்டும் பணிக்காக, என்மனங்கொண்டான் பகுதியில் கிட்டங்கி அமைத்து அங்கு சிமென்ட் மூட்டைகளை வைத்துள்ளனர்.
மாவட்ட செயற்பொறியாளர் சடையப்பன் கிட்டங்கியில் ஆய்வு செய்தபோது இருப்பில் இருந்த 4,050 சிமென்ட் மூட்டை காணவில்லை என தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில், இளநிலை செயற்பொறியாளர் சுப்பிரமணியன் ரூ. ஒன்பது லட்சத்து 35 ஆயிரத்து 550 மதிப்புள்ள 4,050 சிமென்ட் மூட்டைகளை வெளி மார்க்கெட்டிற்கு கடத்தி விற்பனை செய்துள்ளது தெரிய வந்தது.
இதனையடுத்து, செயற் பொறியாளர் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மலைராஜ் வழக்கு பதிவு செய்து இளநிலை செயற்பொறியாளர் சுப்பிரமணியனை வலை வீசி தேடி வருகின்றனர்.