பன்னாட்டு நிறுவனங்களில் அதிகரித்துவிட்ட மோசடி!
இதற்காகவே பிரத்தியேகமாக இந்நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த உண்மைகள் தெரிய வந்துள்ளன.
பொருளாதார வீழ்ச்சி காரணமாக நிறுவனங்களின் கணக்குகளில் உள்ள நேர்மைத் தன்மை குறித்து அறிய 54 நாடுகளில் உள்ள பிரபல எம்என்சி கம்பெனிகளின் மூத்த அதிகாரிகள் 3,000 பேரிடம் பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் சர்வே நடத்தியது.
இதில் கிடைத்த தகவலின்படி, 38 சதவீதம் நிறுவனங்களில் பொருளாதார ரீதியான குற்றங்கள் நடந்துள்ளது தெரியவருகிறது. இது 2007ம் ஆண்டு நிலவரத்தைக் காட்டிலும் 12 சதவீதம் அதிகமாம்.
சர்வதேச நிதி நெருக்கடியின் விளைவாக பணியாளர்கள் மீதான அதிகபட்ச அழுத்தம் தரப்பட்டு, அதிலிருந்து மீள்வதற்காக நடைபெற்ற குற்றங்களே அதிகம் என்று பெரும்பாலான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிதி நெருக்கடியால் பாதிக்கப்படும் நிறுவனங்கள் பாதிப்பை ஈடுகட்ட, பணியாளர்கள் மீது அதிகபட்ச சுமைகளை ஏற்றுவதும், தங்கள் வேலைகளை தக்க வைத்துக்கொள்ள பணியாளர்கள் தவறான பொருளாதார குற்றங்களில் ஈடுபடுவதும் பொதுவாக பல நிறுவனங்களில் நடந்துள்ளது.
சர்வேயில் பங்கேற்ற நிறுவனங்களில் 40 சதவீதம் பேர், தங்கள் நிறுவனங்களில் பொருளாதார ரீதியான குற்றங்கள் நிதி நெருக்கடி காரணமாகவே அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். பணியாளர்களுக்கான சலுகைகள் குறைக்கப்பட்டதால் இதுபோன்ற குற்றங்கள் அதிகரிப்பதாக மூன்றில் ஒரு பங்கினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலகளவில் சரிவு நிலையில் இருப்பவை, நிமிர்ந்து நடைபோடுபவை என பாரபட்சமில்லாமல் அனைத்து நிறுவனங்களிலும் பொருளாதார குற்றங்கள் நிகழ்துள்ளன.
இவற்றில், நிறுவன சொத்து மோசடி அல்லது நிதி மோசடி குற்றங்களே இதில் பிரதானமாக உள்ளது. பொருளாதார குற்றங்களில் 67 சதவீதம் இதுபோன்றவைதான். சில்லறை செலவுக்காக தரப்படும் பெட்டி கேஷில் கைவைப்பது, பொருட்கள் சப்ளையில் பொய் கணக்கு காட்டுதல், சின்ன சின்ன ஊழல் போன்றவை 27 சதவீதம் நடந்துள்ளது.
உலகம் முழுக்க மொத்தம் 70 சதவிகித நிறுவனங்களில் இதுபோன்ற மோசடிகள் நடப்பதாக இந்த பொருளாதார ஆய்வு முடிவு உறுதியாகத் தெரிவித்துள்ளது.