கப்பலில் அணுப் பொருள் இல்லை-வதந்ததியே!
சென்னை: சரக்குக் கப்பலில் அணு பொருள் இருப்பதாக தொலைபேசியில் வந்த தகவல் வதந்தி. வதந்தி கிளப்பிய நபரை தேடி வருகிறோம் என்று சென்னை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
விசாகப்பட்டனத்திலிருந்து சென்னை வந்த எம்.வி.கார்லேன்ட் என்ற சரக்குக் கப்பலில் கதிர்வீச்சுத் தன்மையுடைய பொருள் இருப்பதாக சென்னை பொறுப்புக் கழகத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் வந்தது.
இதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. உனடியாக அந்தக் கப்பல் துறைமுக வளாகத்திற்குக் கொண்டு வரப்பட்டது. கல்பாக்கம் அணு மின் நிலைய நிபுணர் குழு சோதனை நடத்துவதற்காக வரவழைக்கப்பட்டது.
இந்தக் குழுவினர் நேற்று கிட்டத்தட்ட 10 மணி நேரம் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இந்த சோதனையில் எந்த கதிரியக்கப் பொருளும் கப்பலில் இருப்பதாக தெரியவில்லை.
இந்த சோதனையில் கல்பாக்கம் அணு மின் நிலைய நிபுணர்கள் தவிர கடற்படை அதிகாரிகள், கடலோர பாதுகாப்புப் படை அதிகாரிகள் உள்ளி்டடோரும் ஈடுபட்டனர்.
இந்த சோதனைக்குப் பின்னர் கடலோரப் பாதுகாப்புப் படை ஐஜி ராஜேஷ் தாஸ் கூறுகையில், கப்பலில் எந்த கதிரியக்கப் பொருளும் இல்லை. அப்படி இருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பு வதந்தி என்று தெரிய வந்துள்ளது என்றார்.
இந்த வதந்தியால் தமிழக கடலோரப் பகுதி முழுவதும் கடந்த 2 நாட்களாக உஷார்படுத்தப்பட்டிருந்தது. கடலோரப் பகுதிகளில் போலீஸார் தீவிர சோதனையிலும் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பந்தப்பட்ட கப்பல் சென்னைக்கு வருவதற்கு முன்பு ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், எகிப்து ஆகிய நாடுகளுக்குச் சென்று விட்டு இந்தியாவுக்குள் வந்திருந்தது. சிமென்ட், கிரானைட் கற்கள் உள்ளிட்டவைதான் இந்த கப்பலில் உள்ளனவாம். தற்போது இந்தக் கப்பல் சிங்கப்பூர் செல்ல வேண்டியுள்ளது.
இக்கப்பலில் அணுப் பொருள் இருப்பதாக வதந்தி பரப்பிய நபரைப் பிடிக்க போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications