மருத்துவமனையின் அலட்சியம்-வாயிலில் பிரசவித்த பெண்
தேனி: தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், செவிலியர்கள் காட்டிய அலட்சியத்தால் வாசலிலேயே குழந்தை பெற்றுள்ளார் ஒரு பெண்.
தேனி மாவட்டம் உத்தம பாளையம் அருகே உள்ளது ராயப்பன்பட்டி. இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த மருத்துவமனையில் ராயப்பன்பட்டி, அணைப்பட்டி கோகிலாபுரம், ஆனை மலையன்பட்டி, ராமசாமிநாயக்கன்பட்டி, உள்ளிட்ட கிராம மக்கள் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த நிலையில், ஆனைமலையன் பட்டியை சேர்ந்த தங்க பாண்டி என்பவரது மனைவியான கர்ப்பிணி ரெங்கம்மாள் (26)ராயப்பன்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வந்தார்.
தாயாருடன் வந்தார் இவர். அப்போது மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் அங்கு பணியில் இருந்த நர்ஸ், டாக்டர் வரட்டும் வந்தவுடன் மருத்துவமனையில் அனுமதிப்பதாக கூறியுள்ளார்.
டாக்டர் வராததால் நீண்ட நேரமாக வாசலிலேயே காத்திருந்தார் ரெங்கம்மாள். மதியம் 2 மணியாகியும் டாக்டர் வரவில்லை. இந்த நிலையில் ரெங்கம்மாள் இடுப்பு வலியால் துடித்து மருத்துவமனை வாசலிலேயே கதறி அழுதார். தனது மகள் அழுகுரலை கேட்ட தாய் ஓடி வந்தார்.
மகளின் நிலை கண்டு தான் அணிந்து இருந்த சேலையை உருவி மறைத்துவைத்து மகளுக்கு தாயே பிரசவம் பார்த்தார். அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் ரெங்கம்மாள்.
தகவல் அறிந்து ரெங்கம்மாளின் உறவினர்கள் குவிந்து விட்டனர். டாக்டர் வராதது ஏன், ஏன் ரெங்கம்மாளை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை என்று கூறி போராட்டத்தில் குதித்தனர்.
இதைத் தொடர்ந்து கோம்பை வட்டார மருத்துவ அலுவலர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தார். இதனை அடுத்து குழந்தை பெற்ற தாய்க்கும் குழந்தைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சோக சம்பவம் குறித்து நாகரத்தினம் கூறுகையில், ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவம் என்பது மறுபிறப்பாகும். காலை 8.30 மணிக்கு வந்த எங்களை மருத்துவமனைக்குள் அனுமதிக்காமல் டாக்டர்கள் வரட்டும் என்று காலம் கடத்திவிட்டு எனது மகளுக்கு மருத்துவமனை வாசலில் பெற்ற தாயே பிரசவம் பார்க்கும் நிலை ஏற்பட்டு விட்டது என்று கூறி அழுதார்.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட சுகாதாரதப் பணிகள் துணை இயக்குநர் செல்லத்துரை, தாசில்தார் மனோகரன் ஆகியோர் விசாரணை நடத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications