மராத்தியில் இணையதளம்- செபிக்கு ராஜ் தாக்கரே கட்சி உத்தரவு
மும்பை: இனவெறியுடன் செயல்பட்டு வரும் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சி அடுத்து செக்யூரிட்டிஸ் அன்ட் எக்சேஞ்ச் போர்ட் ஆப் இந்தியா எனப்படும் செபியை தனது கையில் எடுத்துக் கொண்டுள்ளது. செபி இணையதளத்தில் மராத்தியும் இடம் பெற வேண்டும் என்று அது உத்தரவிட்டுள்ளது.
இப்போதுதான் செபி தனது புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தைத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிர மக்கள் சிவசேனா மற்றும் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா என இரு பெரும் மொழிவாரிக் கட்சிகளின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த இரு கட்சிகளும் யார் பெரியவர் என்பதை காட்டுவதற்காக அடாவடியாக பிற மொழியினர் மீது குறிப்பாக இந்தி மொழியின் மீது காட்டமாக செயல்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில்தான் சட்டசபைக்குள் வைத்து சமாஜ்வாடி எம்.எல்.ஏ அபு ஆஸ்மியை அடித்தனர் ராஜ் தாக்கரே கட்சியினர். இவர்களுக்கு தாங்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதைக் காட்டுதவற்காக சிவசேனா கட்சியினர் ஐபிஎன் லோக்மாத் டிவி அலுவலகத்தைத் தாக்கி சூறையாடினர்.
இந்த நிலையில் ராஜ் தாக்கரே கட்சியினர் அடுத்து செபிக்குக் குறி வைத்துள்ளனர்.
செபியின் துணை தலைமை செயல் அதிகாரி ஆசிஷ் குமார் செளஹானை ராஜ் தாக்கரே கட்சியின் கொலாபா பிரிவு தலைவர் அரவிந்த் காவ்டே என்பவர் நேரில் சந்தித்து, செபியின் இணையதளத்தில் மராத்தி மொழியும் இடம் பெற வேண்டும் எனக் கோரி மனு கொடுத்துள்ளார்.
சமீபத்தில் தொடங்கப்பட்ட செபியின் புதிய இணையதளத்தில் ஆங்கிலம் தவிர இந்தி, குஜராத்தி ஆகிய மொழிகளிலும் பக்கங்கள் இடம் பெற்றுள்ளன. இதையடுத்து அதில் மராத்தியையும் சேர்க்க வேண்டும் என மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து காவ்டே கூறுகையில் வசதியாக மராத்தியை புறக்கணித்துள்ளது செபி. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. மும்பையில்தான் செபியின் தலைமையகம் உள்ளது. மகாராஷ்டிராவின் தலைநகரில் அலுவலகத்தை வைத்துக் கொண்டு மராத்தியை புறக்கணிப்பதை ஏற்க முடியாது.
இதை நாங்கள் அவர்களுக்கு சுட்டிக் காட்டினோம். அவர்களும் அதை உணர்ந்து கொண்டு தவறைத் திருத்திக் கொள்வதாக ஒப்புக் கொண்டுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications