முல்லைப் பெரியாறு அணை ஸ்திரமாக உள்ளது - தமிழக அரசு
சென்னை: முல்லைப் பெரியாறு அணை ஸ்திரமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது. கேரளா கூறுவது போல அதில் எந்தவித நீர்க்கசிவும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நீர்வளத்துறைக்கு தமிழக அரசு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.ராமசுந்தரம் அனுப்பியுள்ள கடிதத்தில்,
முல்லைப் பெரியாறு அணையில் நீர்கசிவு இருக்கிறது என்று கேரள அரசு கூறியதாக சமீபத்தில் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதையடுத்து அணையை ஆய்வு செய்து அதன் உறுதித் தன்மையை கண்டறிந்து தெரிவிப்பதற்காக அணை பாதுகாப்பு இயக்ககத்தின் தலைமை பொறியாளர்கள் மற்றும் பொறியாளர்களை கடந்த 17 மற்றும் 20-ந் தேதிகளில் தமிழக அரசு அனுப்பியது.
அந்த குழுவினர் அணையின் சுவர்களுக்கு இடையே உள்ள வெற்றுப்பகுதியான உள் சுரங்கம் (கேலரி), அணையின் அடிப்பகுதி, வடிகால் பகுதி ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்தனர்
தமிழக அரசின் பொறியாளர் குழு தமிழக அரசுக்கு அளித்த அறிக்கையில், நீர்க்கசிவின் அளவு ஒரு நிமிடத்திற்கு 58.46 லிட்டராக இருந்ததாக கூறியுள்ளனர். அப்போது அணையில் நீர்ட்டம் 135.10 அடியாக இருந்தது. இது அனுமதிக்கப்பட்ட நீர்க்கசிவு அளவை விட குறைவானதாகும்.
அணையின் 17 மற்றும் 18 பிளாக்குகளில் உள்ள கட்டுமான இணைப்புகளில் போடப்பட்டிருந்த தார் நீண்டகாலம் ஆகிவிட்டதால் கொஞ்சம் வெளியே வந்துவிட்டது. அதனால் நீர்க்கசிவு ஏற்பட்டிருப்பதை அணை பாதுகாப்புக் குழு கண்டுபிடித்துள்ளது.
அணையின் வழக்கமான பராமரிப்பின்போது இது சரிசெய்யப்படும். அதன்பிறகு நீர்க்கசிவோ, ஈரமான தன்மையோ இருக்காது. மேலும், ஈரமான தன்மை இருந்ததற்கு சமீபத்தில் பெய்த மழையே காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை மற்றும் தண்ணீர் வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் ஆகியவை சிறந்த செயல்பாட்டில் உள்ளன என்று அணையை ஆய்வு செய்த குழு தெரிவித்துள்ளது. இந்த குழுவின் கருத்துப்படி முல்லைப் பெரியாறு அணை உறுதியாகவும், பாதுகாப்பான நிலையிலும் உள்ளது.
அணையில் நீர்க்கசிவு இருக்கிறது என்று கேரள அரசு கூறியதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருக்கும் நிலையில் மேற்கண்ட உண்மைகள் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.