பாகிஸ்தானில் யாருடன் பேசுவது?-மன்மோகன் சிங்
வாஷிங்டன்: அணுசக்தி ஒப்பந்தத்தை அமலாக்கும் வகையில் இந்தியாவுக்குத் தேவையான தொழில்நுட்பங்களை
அமெரிக்கா தாராளமாக வழங்க முன்வர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், அதிபர் பாரக் ஒபாமாவை நாளை சந்திக்கிறார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவது, பாகிஸ்தான், தீவிரவாதம் குறித்து முக்கியமாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் பதவி கிடைத்தது பெருமை...
இந் நிலையில் சிஎன்என் தொலைக்காட்சிக்கு மன்மோகன் சிங் அளித்த பேட்டியில், இந்தியாவை ஒரு நாள் தலைமை தாங்கி நடத்துவேன் என்று நான் ஒருபோதும் நினைத்துக் கூட பார்த்ததில்லை. எனது இந்த வெற்றிக்கு எனது நாட்டின் ஜனநாயகம்தான் முக்கிய காரணம்.
இந்த அளவுக்கு வருவேன் என நான் நினைத்ததில்லை. இன்று நான் இந்த நிலையில் இருப்பதற்கு நான் பெற்ற கல்வியும், எனது நாட்டில் தழைத்தோங்கி வரும் ஜனநாயகமும்தான் முக்கிய காரணம்.
என்னைப் போன்ற சாதாரண பின்னணி கொண்ட ஒருவனால் மிகப் பெரிய பதவிக்கு வர முடியும் என்பதை உறுதி செய்தது எனது நாட்டின் ஜனநாயக கோட்பாடுகள்தான் என்றார்.
இதேபோல நியூஸ்வீக் இதழுக்கு அவர் அளித்துள்ள இன்னொரு பேட்டியில்,
இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டுக்கு அமெரிக்கா மரியாதை தருகிறதா இல்லையா என்பது பற்றி கவலை இல்லை. இருப்பினும் அதன் அமலாக்கத்தின் அடுத்த கட்டத்துக்கு போகத் தயார் என அமெரிக்கா உறுதிமொழி தரவேண்டும்.
அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்காக, அணுகுண்டு சோதனைக்கு தடை விதிக்க அமெரிக்கா முயற்சிப்பது குறித்து கவலையில்லை.
அணு ஆயுத சோதனைக்கு தானே முன்வந்து தடை விதித்துக்கொண்ட நாடு இந்தியா. இப்போதும் இதே நிலைதான். அணு ஆயுதமில்லா உலகு அமைய வேண்டும்
என்பதே இந்தியாவின் நிலை.
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அமலுக்கு கொண்டு வரும் அடுத்த நிலைக்கு அமெரிக்கா சென்று அணு சக்தி தொழில்நுட்பம், சாதனங்களை இந்தியாவுக்கு தடையின்றி வழங்கவேண்டும்.
அணு ஆயுதப்பரவலை முழுமனதுடன் எதிர்க்கும் நாடு இந்தியா. இந்த விஷயத்தில் அதன் நேர்மையை யாரும் எள்ளளவும் சந்தேகிக்க முடியாது. எனவே அணு சக்தி தொழில்நுட்பங்களை வழங்குவதற்கு அமெரிக்கா தடைபோடக்கூடாது என்றார்.
முன்னதாக விமானத்தில் நிருபர்களிடம் பேசிய அவர்,
மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தானை வற்புறுத்தி வந்தோம். எகிப்தில் நடந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஹிலானியை சந்தித்தபோது இதுபற்றி பேசினேன். அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
இந்தத் தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்த ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலா வருகிறான். மேலும் இதில் தொடர்புடைய மெளலானா மசூத் போன்ற நபர்கள் சுதந்திரமாக திரிகிறார்கள்.
பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு எதிராக போராடுவதாக சொல்கிறார்கள். ஆனால் அப்படித் தெரியவில்லை.
பாகிஸ்தானில் ராணுவம்தான் பெரிய அதிகாரம் படைத்ததாக உள்ளது. அங்கு ஜனநாயக ஆட்சி நடந்தாலும் அதிகாரம் ராணுவத்திடமே உள்ளது. ஜனநாயகத்துக்கு எதிரானவர்களே அந்த ராணுவத்தில் இருக்கிறார்கள்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லை தொடர்ந்து நீடிக்கும் இதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. பாகிஸ்தானில் இருக்கும் அணுகுண்டுகள் தலிபான் தீவிரவாதிகளிடம் சென்றுவிடலாம் என்ற அச்சம் எங்களுக்கு இருக்கிறது.
ஆனால் அமெரிக்கா அணுகுண்டுகள் தீவிரவாதிகளிடம் செல்லாது என்று உத்தரவாதம் அளித்துள்ளது என்றார்.
பாகிஸ்தானில் தற்போது உங்களுக்கு ஈடான தலைவர் யார், யாருடன் நீங்கள் பேச முடியும் ? என்று கேட்டபோது, எனக்கு ஈடான அதிகாரமுள்ள தலைவர் யாரும் தற்போது பாகிஸ்தானில் இருப்பதாக நன் கருதவில்லை.
முஷாரப் அதிபராக இருந்தபோது நான் அவரிடம் பேசுவேன்.அப்போது அவர் தன்னை ரராணுவ பிரதிநிதி என்றும், மக்கள் பிரதிநிதி என்றும் கூறுவார். தற்போது யாருடன் பேசுவதென்றே தெரியவில்லை என்றார் மன்மோகன் சிங்.