பள்ளி வேன் கவிழ்ந்து எல்.கே.ஜி சிறுவன் பலி- 19 பேர் காயம்
கடலூர்: கடலூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் 19 சிறுவர், சிறுமிகள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்
கடலூர், புதுச்சத்திரம் அருகே உள்ள தனியார் பள்ளி வேன் ஒன்று, சுமார் 20 மாணவர்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை பள்ளிக்கு புறப்பட்டது.
கடலூர்- சிதம்பரம் மெயின் ரோட்டில் உள்ள பெரியப்பட்டு என்ற இடத்தில் வேன் வந்த போது, வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி அருகில் உள்ள வயலில் தலைகீழாக கவிழ்ந்தது.
இதில் வேனில் பயணம் செய்த எல்.கே.ஜி. மாணவன் கல்பாக்கத்தை சேர்ந்த ராமு (வயது 4), பரிதாபமாக இறந்து போனான்.
மேலும் எல்.கே.ஜி. மாணவி ஆலப்பாக்கத்தை நிவேதா (4) உட்பட 19 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வேன் மூலம் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பெற்றோர்களின் கதறலால் மருத்துவமனை முழுவதும் சோகம் நிரம்பு காணப்பட்டது. கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன், போலீஸ் சூப்பிண்டு அஸ்வின் கோட்னீஸ் ஆகியோர் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.