சீன ஆதரவுடன் உல்ஃபா தீவிரவாதிகள்-கோகாய்

அஸ்ஸாம் மாநிலத்தில் நேற்று அடுத்தடுத்து நடந்த 3 குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 7 பேர் கொல்லப்பட்டனர். உல்ஃபா தீவிரவாதிகளே இதற்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் உல்ஃபா தீவிரவாதிகள் தங்களது மையத்தை சீனாவுக்கு மாற்ற திட்டமிட்டு வருவதாக அஸ்ஸாம் முதல்வர் கோகாய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தடை செய்யப்பட்ட உல்ஃபா தீவிரவாதிகள், சீனாவுக்கு இடம் பெயர முயன்று வருகின்றனர்.
சீனாவின் ஆதரவைப் பெறவும் அவர்கள் முயல்வதாக தெரிகிறது. சீனாவின் ஆதரவு கிடைத்துள்ளதா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. ஆனால் சீனாவிலிருந்தபடி செயல்பட அவர்கள் முயன்று வருகின்றனர் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது என்றார் கோகாய்.
இதற்கிடையே, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூரும் கூட இதே சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நமது அண்டை நாடுகள் அனைத்துடனும் நாம் தொடர்பு கொண்டுள்ளோம். யாரும் அவர்களது மண்ணை உல்ஃபா தீவிரவாதிகள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று கூறி வருகிறோம். இந்த நாடுகளில் சீனாவும் உண்டு.
இந்தப் பிரச்சினையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பது முக்கியமானு என்பதை அனைத்து நாடுகளும் புரிந்து கொள்ளும் என நம்புகிறோம் என்றார் தரூர்.
காஷ்மீர் விவகாரத்தில் தலையிடமாட்டோம்: சீனா
இந் நிலையில் காஷ்மீர் பிரச்சனை இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே உள்ள இரு தரப்பு விவகாரம். இதற்கு தீர்வு காண இரு நாடுகளுக்கும் இடையே நடுவராக நின்று செயல்பட மாட்டோம் என்று சீனா அறிவித்துள்ளது.
கடந்தவாரம் சீனா சென்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் சீன அதிபரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்,
இந்தியா-பாகிஸ்தான் உறவு மேம்பட அமெரிக்காவும் சீனாவும் துணை நின்று செயல்படும் என்று
தெரிவித்திருந்தனர். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.
இந்தியா-பாகிஸ்தான் உறவு தொடர்புடைய எந்த விவகாரத்திலும் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட எந்த மூன்றாம் தரப்பு நாடுகளும் தலையிடுவதை விரும்பவில்லை என்று இந்தியா காட்டமாக பதில் தந்தது.
இந் நிலையில் இந்தியா- பாகிஸ்தான் விவகாரத்தில் சீனா தலையிடாது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடியாகவே பேசி தீர்த்துக்கொள்ளட்டும் என்று சீனா அறிவித்துள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் சீனா தலையிட வேண்டும் என்ற ஹுரியத் அமைப்பின் தலைவர் மீர்வைஸ் உமர் பாரூக் தெரிவித்த யோசனையை ஏற்க முடியாது என்றும் சீனா கூறியுள்ளது.
ஏற்கமுடியாத யோசனையை கூறி இந்த விவகாரத்தில் தன்னையும் ஒரு பெரிய ஆளாக காட்டிக் கொள்ள மீர்வைஸ் முயல்வதாக மத்திய அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications