ஹெட்லியின் கூட்டாளியான ஹூஜி தீவிரவாதி பாகிஸ்தானில் கைது
டெல்லி: அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹெட்லி என்கிற கிலானி மற்றும் பாகிஸ்தான் கனடியரான தஹவூர் ராணா ஆகியோருடன் சேர்ந்து இந்தியாவில் மிகப் பெரிய தீவிரவாதத் தாக்குதலை நடத்த சதித் திட்டம் தீட்டிய ஹர்கத் உல் ஜிஹாத் இஸ்லாமி (ஹூஜி) அமைப்பின் தலைவரான இலியாஸ் காஷ்மீரி என்பவரை பாகிஸ்தான் போலீஸார் கைது செய்துள்ளதாக தெரிகிறது.
எப்.பி.ஐயின் கோரிக்கையின் பேரில் காஷ்மீரியை பாகிஸ்தான் படையினர் கைது செய்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் காஷ்மீரி கைது குறித்த விவரங்களை இந்தியாவுடன் பாகிஸ்தான் பகிர்ந்து கொள்ளவில்லை.
ஆனால் கடந்த மாதம் ஹெட்லி, ராணா கைது செய்யப்பட்ட பின்னர் இதுவரை 7 பேரை கைது செய்துள்ளது பாகிஸ்தான். கடைசியாக கைது செய்யப்பட்டுள்ளவர் காஷ்மீரி என்று உளவுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரி, முன்பு பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புப் பிரிவில் பணியாற்றியவர் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
இந்தியா, டென்மார்க் நாடுகளுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியதாக ஹெட்லி, ராணா, காஷ்மீரி உள்ளிட்ட ஐந்து பேர் மீது சிகாகோ கோர்ட்டில் எப்.பி.ஐ. புகார் பதிவு செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான் ஜிஹாத் என்ற அமைப்பின் முன்னாள் தலைவர்தான் இந்த காஷ்மீரி. இவர் கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் முறையாக கைது செய்யப்பட்டார். 2003ம் ஆண்டு அப்போதைய அதிபர் முஷாரப்பைக் கொல்ல சதி செய்ததாக கூறி 2005ல் கைது செய்ய்பட்டார். இருப்பினும், பின்னர் அவர் விடுவிக்கப்பட்டு விட்டார். அதன் பின்னர் லஷ்கர் தீவிரவாதிகளுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். நன்கு படித்தவர்களை இயக்கத்தில் இணைத்து அவர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளிக்கும் ஒருங்கிணைப்பாளர் போல காஷ்மீரி செயல்பட்டு வந்தார்.
இவர்தான் பாகிஸ்தானில் பிறந்த மேலை நாட்டவரை லஷ்கர் இ தொய்பா பக்கம் திருப்ப முக்கிய கருவியாக செயல்பட்டவர் என்று தெரிய வந்துள்ளது. ஹெட்லி, ராணாவையும் இவர்தான் லஷ்கர் பக்கம் இழுத்து வந்தவர். இவருடன் ஹூஜி அமைப்பின் இன்னொரு தலைவரான உமர் சயீத் ஷேக் என்பவரும் இணைந்து இந்தப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த ஷேக் வேறு யாருமில்லை, காந்தஹார் விமானக் கடத்தலின்போது இந்திய அரசால் விடுவிக்கப்பட்ட 3 தீவிரவாதிகளில் ஒருவர்தான் ஷேக்.
4 வருடங்களுக்கு முன்புதான் ஹெட்லிக்கும், காஷ்மீரிக்கும் தொடர்பு ஏற்பட்டது. அதேசமயம், காஷ்மீரிக்கும், ஷேக்குக்கும் இடையே பலவருடங்களாக தொடர்பு உள்ளதாம்.
ஜம்மு காஷ்மீர் மீது அடிக்கடி தாக்குதல் தொடுத்த பாகிஸ்தான் ராணுவத்தின் 313வது படைப் பிரிவின் தலைவராக இருந்தவர் காஷ்மீரி. 1994ம் ஆண்டு இவர் இந்தியாவுக்குள் ஊடுறுவினார். அப்போது காஸியாபாத்தில் வைத்து இவருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. அதில் தப்பி பாகிஸ்தானுக்கு திரும்பினார் காஷ்மீரி.
அந்த சண்டையின்போதுதான் உமர் ஷேக் இந்தியப் படையினரிடம் பிடிபட்டார். கைது செய்யப்பட்டார். பின்னர் காந்தஹார் விமானக் கடத்தலின்போது பயணிகளை விடுவிப்பதற்காக ஷேக் உள்ளிட்டோரை விடுவிக்க வேண்டும் என தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தனர். அதை ஏற்று இந்திய அரசு ஷேக் உள்ளிட்டோரை விடுவித்தது.
அதன் பின்னர் இந்தியாவுக்குள் காஷ்மீரி ஊடுறுவவில்லை. இருப்பினும் ஜம்மு காஷ்மீருக்கு எதிராக தொடர்ந்து தீவிரவாத செயல்களை தூண்டி விட்டு வந்தார். தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து இந்தியாவுக்குள் ஊடுறுவச் செய்தார்.
முன்பு ஒருமுறை இவர் ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் 1998ம் ஆண்டு சிறையிலிருந்து தப்பி விட்டார்.