லேட்டாக வந்த அமைச்சர்-மயங்கி விழுந்த மாணவி!
சென்னை: மாவட்ட பள்ளிச் சீரமைப்பு மாநாட்டுக்கு வருகை தரும் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசுவை வரவேற்பதற்காக நீண்ட நேரம் வெயிலில் கையில் தட்டுக்களை ஏந்தியபடி நின்ற மாணவி சோர்வடைந்து மயங்கி விழுந்தார். விழாவுக்கு அமைச்சர் நீண்ட தாமதத்திற்குப் பின்னர் வந்ததால் இந்த கொடுமை.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளியில் சென்னை மாவட்ட பள்ளிச் சீரமைப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டையொட்டி பல்வேறு பள்ளிகள் சார்பில் கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகள் பார்வையிடஇருந்தனர்.
இந்த நிலையில், திடீர் என்று அருணாசல பிரதேசத்தில் இருந்து வந்த கல்விக்குழு, தங்கம் தென்னரசை சந்தித்ததால் அமைச்சர் 10-30 மணிக்கு தொடங்க இருந்த அந்த விழாவுக்கு 11-30 மணிக்கு வந்தார்.
ஆனால் வரப் போகிற அமைச்சரவை வரவேற்பதற்காக காலை 9 மணி முதலே மாணவிகள் கால் கடுக்க, கைகளில் விளக்கு ஏந்திக் கொண்டும், மலர் தட்டுகளை வைத்துக் கொண்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததால் சோர்வடைந்த ஒரு மாணவி மயங்கி விழுந்து விட்டார். இதையடுத்து அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உட்கார வைக்கப்பட்டார்.
அமைச்சரவை வரவேற்பதற்காக நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு மாணவி மயங்கி விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் ஒரு வழியாக அமைச்சர் வந்து சேர்ந்தார். தான் தாமதமாக வந்ததற்காக மேடையில் அவர் வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications