மும்பை தாக்குதல் தினம்: இந்தியாவில் இல்லாத பிரதமர்-மக்கள் ஏமாற்றம்
இன்று மும்பைத் தாக்குதல் சம்பவத்தின் முதலாண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. காலை முதல் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மக்கள் மும்பை சம்பவத்தில் உயிர் நீத்த மக்களுக்காக அஞ்சலி செலுத்தினர். மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்தனர்.
ஆனால் நாட்டின் பிரதமரான மன்மோகன் சிங் இன்றைய தினம் இந்தியாவில் இல்லாதது மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
அமெரிக்காவுக்கு சென்றுள்ள பிரதமர், அமெரிக்க அதிபருடன் அளவளாவி வருவதும், விருந்துண்டதையும் மக்கள் ரசிக்கவில்லை. அங்கிருந்து மும்பை நினைவு நாளையொட்டி அவர் மக்களுக்கு ஆறுதல் கூறி அறிக்கை விட்டதையும் மக்கள் ரசிக்கவில்லை.
அதை விடக் கொடுமையாக நாடாளுமன்றத்தில் ஒருமித்த குரலில் தீவிரவாதத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் எதிராக, மக்களுக்கு ஆதரவாக இன்று எம்.பிக்கள் குரல் கொடுக்காமல் போனது மக்களை மேலும் வெறுப்படைய வைத்துள்ளது.
நாட்டின் தலைவரான பிரதமர் இன்று இந்தியாவில் இருந்திருக்க வேண்டும். மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியிருக்க வேண்டும். மும்பை மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் ஆதரவாக பேசியிருக்க வேண்டும். தீவிரவாதிகளுக்கு எதிராக அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது, எடுத்து வருகிறது என்பதை விளக்கியிருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்தனர்.
பிரதமர்தான் இல்லை, நமது நாட்டு நாடாளுமன்றமாவது ஒருமித்த குரலில் மும்பை நினைவு தினத்தை அனுசரித்ததா என்றால் அதுவும் இல்லை. இன்று நாடாளுமன்றத்தில் வழக்கம் போல எதிர்க்கட்சிகள் ஒன்று பேச, அரசு ஒன்று பேச என வழக்கம் போல அமளிதான்.
இன்றும் நாடாளுமன்றம் அமளியால் ஒத்திவைக்கப்பட்டது நாட்டு மக்களை கேவப்படுத்தியது போலாகி விட்டது.
அதேபோல குடியரசுத் தலைவரும் கூட இன்றைய தினத்தை பெரிய அளவில் கவலைப்பட்டதாக தெரியவில்லை. நேற்று சுகோய் விமானத்தில் அவர் பறந்து சாதனை படைத்தார். இன்று நாட்டு மக்களுக்கு ஆதரவாக அவர் எதுவும் பேசவில்லை.
தீவிரவாதத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் எதிராக மக்களிடம் உள்ள உணர்வில் ஒரு பங்கு கூட தலைவர்களிடம் இல்லை என்பதாகவே இவையெல்லாம் உணர்த்துகிறது.