ஸ்டாலினுக்கு கறுப்பு கொடி: தளவாய் சுதந்தரம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரிக்கு வருகை தரும் துணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக கறுப்பு கொடி ஏந்தி தர்ணா போராட்டம் நடத்துவோம் என முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கூறியுள்ளார்.
பேச்சிப்பாறையில் சமத்துவபுரத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் இருந்து 6 வீடுகளை அதிகாரிகள் இடித்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் ரோட்டு ஓரத்தில் கடந்த மூன்று நாட்களாக மழை, வெயிலில் சித்ரவதை அனுபவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்குவதாக திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதி கன்னியாகுமரி மாவட்டத்தில் யாருக்கும் நிறைவேற்றவில்லை.
சமத்துவபுரம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இந்த பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் மக்களின் வீடுகளை இடித்துள்ளனர். ஒரு இடத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அந்த இடம் அந்த குடும்பத்தாருக்கு (பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பகுதியாக இருந்தாலும்) கொடுக்கப்படும் என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்த பகுதியில் வசித்து வந்த மக்களின் இடம் வீடும் இடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி வீடுகளை இடிக்கும் முன் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.
மேலும், இந்த பகுதியில் உள்ள பச்சை மரத்தை மாவட்ட வனத்துறையிடம் இருந்து முறையாக அனுமதி பெறாமல் அதிகாரிகள் வெட்டியுள்ளனர். மேலும் ரப்பர், தென்னை, மா, பலா, புளி, அயனி மரங்களையும் வெட்டியுள்ளனர்.
இடிக்கப்பட்ட வீடுகளில் வசித்தவர்களுக்கு மாற்று இடம் வழங்காவிட்டால் வரும் டிசம்பர் 2ம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தரும் துணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக கறுப்பு கொடி ஏந்தி தர்ணா போராட்டம் நடத்துவோம் என்றார்.












Click it and Unblock the Notifications