இடைத் தேர்தல்: செங்கோட்டையன்-தம்பிதுரையிடம் ஜெ. பொறுப்பு
சென்னை: இடைத் தேர்தல் நடக்கும் திருச்செந்தூர் தொகுதிக்கு செங்கோட்டையனும், வந்தவாசி தொகுதிக்கு தம்பிதுரையும் அதிமுக தேர்தல் பணிக்குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், திருச்செந்தூர் தொகுதி தேர்தல் பணிக்குழுத் தலைவராக அதிமுக தலைமை நிலையச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நியமிக்கப்படுகிறார்.
வந்தவாசி (தனி) தொகுதி தேர்தல் பணிக்குழு தலைவராக கொள்கை பரப்புச் செயலாளரும், அதிமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான தம்பித்துரை எம்.பி. நியமிக்கப்படுகிறார்.
அதிமுக தொண்டர்கள் தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி, அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் அதிமுக சார்பில் அம்மன் நாராயணனும், வந்தவாசியில் முனுசாமியும் போட்டியிடுகிந்றனர்.