சிபிஐயிடம் லிபரான் அறிக்கையை ஒப்படைக்க மத்திய அரசு முடிவு
டெல்லி: லிபரான் கமிஷன் அறிக்கையை சிபிஐ வசம் ஒப்படைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
மேலும், பாபர் மசூதி இடிப்பு வழக்கை தீவிரப்படுத்தவும் அது திட்டமிட்டுள்ளது.
லிபரான் கமிஷனின் அறிக்கையில், வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உட்பட 68 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மீதான நடவடிக்கை அரசின் அறிக்கையும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், உ.பி. கீழ் நீதிமன்றங்களில் உள்ள மசூதி இடிப்பு தொடர்பான வழக்குகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.
அத்வானி மற்றும் சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மீதான இவ்வழக்குகளை சி.பி.ஐ.தான் நடத்தி வருகிறது. எனவே சிபிஐயிடம் அறிக்கையை ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தவும் அது திட்டமிட்டுள்ளது. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உட்பட பலர் மீது சி.பி.ஐ.யால் தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை உ.பி. நீதிமன்றங்களில் நடக்கிறது. லிபரான் கமிஷன் அறிக்கையை பரிசீலித்து அதன் அடிப்படையில் புதிய ஆதாரங்களுடன் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதா என்பதை சி.பி.ஐ. முடிவு செய்யும்.
இந்த நிலையில், லிபரான் கமிஷன் அறிக்கை மீது டிசம்பர் 1ம் தேதி நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.