ஈரோடு: தண்டவாளத்தில் பாறாங்கற்கள்-தப்பியது ரயில்
சென்னிமலை: ஈரோடு அருகே நேற்று நள்ளிரவு நடக்க இருந்த பயங்கர ரயில் விபத்து தடுக்கப்பட்டது.
ஈரோடு, சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் மற்றும் ஜெயமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையிலான தண்டவாளப் பாதையை சரிபார்க்கும் பணியில் ஊழியர்கள் நேற்று இரவு ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஈங்கூர் ரெயில்வே கேட்டிலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் தண்டவாளத்தில் 4 பெரிய பாறாங்கற்கள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைக்கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது தூரத்தில் தண்டவாளத்தில் மேலும் 2 கற்கள் வைக்கப்பட்டிருந்தன.
அப்போது நள்ளிரவு 1 மணிக்கு அதே பாதையில் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது.
உடனடியாக ஊழியர்கள் செல்போன் மூலம் ரயில்வே உதவி பொறியாளருக்கு தகவல் தெரிவித்தனர். தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் ஈங்கூர் ரெயில்வே கேட் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது.
இதனால், மிகப்பெரிய விபத்து தடுக்கப்பட்டது. ஊழியர்கள் தண்டவாளத்தில் இருந்த கற்களை அப்புறப்படுத்திய பின்னர், 20 நிமிடம் தாமதமாக சென்னை-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது.
தண்டவாளத்தில் கற்கள் வைத்தது யார்? மும்பை குண்டுவெடிப்பு தினத்தையொட்டி ரயிலை கவிழ்க்கும் சதி திட்டத்தில் தீவிரவாதிகள் ஈடுபட்டார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications