மும்பை தாக்குதல்-லக்வி, 6 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்தது பாக்.
லக்வி தவிர குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றவர்கள் - ஜரார் ஷா (இவர்தான் தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடத்தியவர்), அபு அல் காமா, ஹமாத் அமீன் சாதிக், ஷாஹித் ஜமீல் ரியாஸ், ஜமீல் அகமது, யூனிஸ் அஞ்சும்.
இவர்கள் தவிர கசாப் உள்ளிட்ட 16 பேர் தலைமறைவுக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
லக்வி உள்ளிட்ட 7 பேர் மீதான குற்றச்சாட்டுக்கள் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கோர்ட்டில் வாசிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. இந்திய அரசுத் தரப்பில் இதுகுறித்துக் கூறுகையில், இந்தியா இதுவரை அளித்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேறகொள்ளப்பட்டிருப்பதாக நம்புகிறோம். இது நிச்சயம் முன்னேற்றமான நடவடிக்கைதான்.
இருப்பினும் லஷ்கர் அமைப்பின் நிறுவனரான ஹபீஸ் சயீத், தொடர்ந்து விசாரணைக்குள் கொண்டு வரப்படாமல் இருப்பது பாகி்ஸதானின் முயற்சிகள் குறித்து முழுமையாக திருப்தி கொள்ள முடியாமல் தடுக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி இந்தியா அளித்த புதிய ஆதாரத்தில், லக்வியின் தொடர்புகள் குறித்து விரிவான தகவல்கள், ஆதாரங்கள் இடம் பெற்றிருந்தன. இருப்பினும் சில நாட்கள் அவரை வீட்டுக் காவலில் வைத்து விட்டு பின்னர் வெளியில் விட்டு விட்டது பாகிஸ்தான் அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட பின்னர் லக்வி உள்ளிட்டோர் மீதான வழக்கு டிசம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக கசாப்பை விசாரணைக்காக பாகிஸ்தானுக்கு அழைத்து வர வேண்டும், இதற்கு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர்.