லாரி-கார் மோதல்:வங்கி அதிகாரி குடும்பத்தோடு பலி
கொடைரோடு: லாரி மீது கார் மோதிய விபத்தில், லாரியின் டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்தது. இதில் காருக்குள் இருந்த வங்கி அதிகாரி, மனைவி-மகனுடன் உடல் கருகி பலியானார்.
சேலம் இரும்பாலை கிளை ஸ்டேட் வங்கி மேலாளராக பணியாற்றியவர் ராமபாண்டியன் (50). மனைவி சண்முகவள்ளி (45). மகன் ஜாய்மதன் (18) என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
வங்கி அதிகாரி ராமபாண்டியன் தனது குடும்பத்துடன் காரில் திருநெல்வேலி சென்றார். பின்னர் அங்கிருந்து சேலம் புறப்பட்டார். காரை அம்பாசமுத்திரம் மேலப்பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (30) என்பவர் ஓட்டி வந்தார்.
இவர்கள் வந்த கார் நேற்று இரவு 7 மணி அளவில் திண்டுக்கல் நோக்கி வந்தபோது கொடைரோடு அருகே ஜல்லிப்பட்டி பிரிவில் விபத்தில் சிக்கியது.
நான்கு வழிச்சாலை பணிக்கு பயன்படுத்தப்படும் லாரி, ஜல்லிப்பட்டி கிராமத்திற்குள் சென்றுவிட்டு மெயின் ரோட்டில் திரும்பிக்கொண்டிருந்தது. இந்த சமயத்தில் வேகமாக வந்தகார், லாரியின் குறுக்கே மோதியது.
இதில் லாரியின் டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்துக் கொண்டது. லாரியும், காரும் தீப்பிடித்து எரியத் தொடங்கின. லாரி டிரைவர் மற்றும் கிளீனர் ஆகியோர் கீழே குதித்து உயிர் தப்பிவிட்டனர்.
காருக்குள் இருந்தவர்கள் அலறி துடித்தனர். இதைதொடர்ந்து அந்த பகுதியில் ஏராளமானவர்கள் கூடிவிட்டனர். இவர்கள் காருக்குள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்க முயன்றனர். கார் டிரைவர் ரமேஷ் என்பவர் மட்டும் மீட்கப்பட்டார்.
சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பின்பு தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் லாரியும், காரும் தீயில் எரிந்து சாம்பலானது.
இந்த கோர விபத்தில் காருக்குள் இருந்த வங்கி மேலாளர் ராமபாண்டியன், அவரது மனைவி சண்முகவள்ளி, மகன் ஜாய்மதன் ஆகியோர் உடல் முழுவதுமாக கருகி காருக்குள்ளேயே இறந்து கிடந்தனர். கொடைரோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications