மாவீரன் என்றால் அது பிரபாகரன் மட்டுமே!-டி.ஆர்
இன்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடைய 55வது பிறந்த நாளையொட்டி அவர் கூறுகையில்,
ஒவ்வொரு பூவுக்கும் வாசமிருப்பதைப் போல... ஒவ்வொரு நாளுக்கும் ஒரு அர்த்தமிருக்கிறது. இந்த நாள் மாவீரன் பிறந்த நாள்.
வரலாற்றில் எத்தனையோ மாவீரர்களைப் பற்றிப் படித்திருக்கிறோம். மாவீரன் என்றால் இந்த சமகாலத்தில் நெப்போலியனை மட்டுமே வரலாறு சொல்லுகிறது. அந்த நெப்போலியன் வரலாற்றைப் படித்தபோதே என் நரம்புகள் புடைத்தன.
ஆனால் இன்று ஒரு தமிழனாக... மாவீரன் என்ற வார்த்தைக்கே புதிய அர்த்தத்தைப் பார்க்கிறேன், பிரபாகரன் மூலம். புறநானூற்றுத் தமிழன் எப்படி இருப்பான் என்பதை என் கண் முன்னால் பார்த்தேன், பிரபாகரன் உருவில்.
இனி எப்போதும் மாவீரன் என்றால் அது பிரபாகரன் மட்டுமே. 'யாருக்கும் அடிபணிய மாட்டோம்... சுயநலத்துக்காக தன் இனத்தின் நலத்தை அடகு வைக்க மாட்டோம்' என்று பொங்கி எழுந்து போராடிய மாவீரன் நமது பிரபாகரன்.
வானத்தில் இருக்கிறான் கரன்... இந்த மனித குலத்தில் இருக்கிறான் பிரபாகரன்..." என்றார்.
திருமாவளவன்:
பிரபாகரன் பிறந்த நாளையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறுகையி்ல்,
தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் ஒட்டுமொத்த தமிழர்களும் பெருமைப்பட்டு பூரிப்படையும் நாள்.
தமிழன் தலை நிமிர்ந்த நாள். தமிழனுக்கு ஒரு நாடு வேண்டும், ஐ.நாவில் தமிழன் கொடி பறக்க வேண்டும் என்ற உன்னத லட்சியத்துடன் 3 தசாப்தங்களாய் போராடி உலகை வியக்கச் செய்த தலைவன் அவர்.
இன்றைய தேவை, நம் அனைத்து தரப்பின் ஒற்றுமை. அந்த ஒற்றுமையுடன் போராட்டத்தைத் தொடர வேண்டும் என்பதே தலைவர் பிறந்த நாளில் விடுதலைச் சிறுத்தைகள் வைக்கும் கோரிக்கை என்றார்.
புலிகள் வானொலியில் தமிழக தலைவர்கள் வாழ்த்து:
இந் நிலையில் பிரபாகரனுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். இதை விடுதலைப் புலிகளின் வானொலி தொடர்ந்து ஒலிபரப்பி வருகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வானொலியான வாய்ஸ் ஆப் டைகர் தற்போது இணையதளம் மூலம் இயங்கி வருகிறது.
பிரபாகரனின் பிறந்த நாளையொயொட்டி புலிகளின் வானொலியில் ஈழப் போராட்டத்தை வாழ்த்தும், பிரபாகரனை வாழ்த்தும், ஈழத் தமிழர்களின் வீரத்தைப் புகழும் பாடல்கள் தொடர்ந்து ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.
இடை இடையே தமிழக அரசியல் தலைவர்கள், பல்துறைப் பிரமுகர்கள் உள்ளிட்டோரின் வாழ்த்துச் செய்திகளையும் ஒலிபரப்பு செய்து வருகின்றனர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், புலவர் புலமைப்பித்தன், கவிஞர் செல்லப்பா உள்ளிட்ட பலரும் பிரபாகரனைப் புகழ்ந்து பேசி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கட் அவுட்கள்-போஸ்டர்கள்..
இதேபோல பிரபாகரனை வாழ்த்தி தமிழகத்தின் பல பகுதிகளிலும் அவரது உருவம் பதித்த கட் அவுட்கள், போஸ்டர்களும் வைக்கப்பட்டுள்ளன.
புலிகளின் ஆதரவாளர்கள் பகிரங்கமாகவும், மறைமுகமாகவும் பிரபாகரனின் பிறந்த நாளை இன்று தமிழகத்திலும் கொண்டாடி வருகின்றனர்.