ஒபாமா-பிரதமர் விருந்தில் அழையா விருந்தாளிகள்: விசாரணைக்கு உத்தரவு

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகை வளாகத்தில் இரவு விருந்தளித்துக் கெளரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அழைப்பிதழ் வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அழைப்பிதழ் இல்லாமல், ஒரு ஜோடி விருந்தில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஜோடி - விர்ஜீனியாவைச் சேர்ந்த தாரிக் மற்றும் மிஷல் சலாஹி ஆகியோர். இவர்கள் அதிகாரப்பூர்வ விருந்தினர் பட்டியலில் இல்லை. அழைப்பிதழும் இவர்களுக்கு அளிக்கப்படவில்லை. ஆனால் இருவரும் விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த பாதுகாப்பு குளருபடி குறித்து விசாரிக்குமாறு அமெரிக்க ரகசியப் போலீஸ் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் எட்வின் டோனவோன் தெரிவித்தார்.
இதுகுறித்து டோனவோன் கூறுகையில், விருந்தினர்களை அனுமதிப்பது தொடர்பாக விடுக்கப்பட்டிருந்த விதிமுறைகளை நான்கு சோதனைச் சாவடிகளில் ஒன்றில் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் சரிவர பின்பற்றவில்லை என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாகவே தாரிக்கும், சலாஹியும் விருந்தில் கலந்து கொள்ள முடிந்துள்ளது. இருப்பினும் இவர்கள் இருவரும் முறையான பாதுகாப்பு சோதனைகளைக் கடந்துதான் உள்ளே வந்துள்ளனர். அழைப்பிதழ் மட்டுமே இவர்களிடம் இல்லை. எனவே பாதுகாப்புக்கு பங்கம் ஏற்பட்டதாக கூற முடியாது என்றார்.
தாரிக்கும், சலாஹியும் டிவி நட்சத்திரங்கள் எனவும், போலோ வீரர், வீராங்கனை எனவும் வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த இருவரும் விருந்தில் கலந்து கொண்ட துணை அதிபர் ஜோ பிடேன், வாஷிங்டன் மேயர் அட்ரியான் பென்டி, சிபிஎஸ் செய்தியாளர் கேத்தி கோரிக், வெள்ளை மாளிகை அலுவலர் பிரிவு தலைவர் ராஹம் இம்மானுவேல் ஆகியோருடன் கை குலுக்கிப் பேசியது போன்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications