வனவியல் மாணவர்கள் போராட்டம்-ஜெ. ஆதரவு
சென்னை: மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரி மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து, கல்லூரியை உடனடியாக திறக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வனத்துறையில் உள்ள வனச்சரகர் பணியிடங்களை, வனவியலில் பட்டப்படிப்பு மற்றும் முதுகலைப்படிப்பு படித்த மாணவர்களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும் என்று மேட்டுப்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வனக்கல்லூரி மாணவர்கள் போராடி வருகின்றனர்.
வனச்சரகர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்படும்போது, தங்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக அரசின் பல்வேறு திட்டங்களான தேசிய மூங்கில் இயக்கம், வடிகால் மேம்பாட்டுத்திட்டம், தரிசு நில மேம்பாட்டுத்திட்டம் போன்ற திட்டங்களில் வனவியல் பட்டம் பெற்றவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற இவர்களின் கோரிக்கை நியாயமானவை.
இதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ, மாணவியர் கடந்த 22ம் தேதி, பதாகையில் ரத்தத்தில் கையெழுத்திட்டு தங்கள் ஆதங்கத்தை, மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
ஆனால், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், வனக்கல்லூரிக்கு காலவரையின்றி விடுமுறை அளித்து, விடுதியையும் பூட்டி மாணவ, மாணவியரை வெளியேற்றிவுள்ளது நிர்வாகம்.
போராட்டம் தீவிரம் அடைந்துள்ள இந்தச் சூழ் நிலையில், அந்தப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டிருப்பதாகவும், மாணவ,மாணவியர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லுமாறு வற்புறுத்தப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.
வனவியல் மாணவ- மாணவியரின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து, கல்லூரியை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications